என் சவ அடக்கத்தின்போது என்ன பேசப்பட வேண்டும்? - மார்ட்டின் லூதர் கிங்

தன் சவ அடக்கத்தின்போது என்ன பேச வேண்டும் என்பதை மார்ட்டின் லூதர் கிங் இவ்வாறு கூறியுள்ளார்.

“என் சவ அடக்கத்தின்போது என்ன பேசப்பட வேண்டும்? இன்று காலை அதைப்பற்றிச் சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறேன். என் சவ அடக்கத்தின்போது நீண்டபொழுதைச் செலவிட வேண்டாம். சீக்கிரமே அது நடந்து முடியட்டும். என் சவ அடக்கத்தின் இறுதிக்கட்டமாக அனுதாப வார்த்தைகளைப் பேசுவதற்காக சிலரை நீங்கள் அழைத்து வரும்போது நீண்ட நேரம் பேசவேண்டாம், சுருக்கமாக உங்கள் உரை இருக்கட்டுமென்று அவர்களிடம் சொல்லுங்கள்.

உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்காக எனக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி எதுவும் குறிப்பிட வேண்டாம், அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.

பல்வேறு சேவைகளுக்காக முந்நூறு, நானூறு பரிசுகளைப் பெற்றவன் நானென்பதைக் குறிப்பிட வேண்டாம். அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.

அந்த நாளில் அவர்கள் மார்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றவர்களுக்குத் தொண்டு புரிவதற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தானென்று குறிப்பிட வேண்டும். மார்டின் லூதர் கிங் ஜூனியர் எல்லாரையும் நேசிக்க முயன்றான் என்று சிலர் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.

அந்த நாளில் பசித்தவர்களுக்கு உணவளிக்க நான் பாடுபட்டேனென்று நீங்கள் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். நிர்வாணமாக நின்றவர்களுக்கு எல்லாம் உடையளிக்க உயிர் உள்ளவரை உழைத்தவன் நானென்று அந்தாளில் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். சிறையில் வாடியவர்களை எல்லாம் உயிர் உள்ளவரை நான் தேடிச்சென்று பார்த்து ஆறுதல் கூறியவன் என்று நீங்கள் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.

மனித குலத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவன் நானென்று அந்த நாளில் என்னைப் பற்றி நீங்கள் குறிப்பிட வேண்டும். நீதிக்காகத் தமுக்கடித்தவன் நானென்று தாராளமாகச் சொல்லுங்கள். உலக அமைதிக்காக தமுக்கடித்தவன் நானென்று சொல்லுங்கள்.”
Via Link

லிங்கன் VS கென்னடி

அமெரிக்காவின் ஜனாதிபதிகளாக இருந்த ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஆச்சரியப்படும் வகையில் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன.

லிங்கனின் மகன்கள் பெயர் ராபர்ட், எட்வர்டு, எட்வர்டு மூன்று வயதில் இறந்து போனார், ராபர்ட் உயிரோடு வாழ்ந்தார்.

ஜான் எப், கென்னடியின் சகோதர்கள் பெயர் ராபர்ட், எட்வர்டு ராபர்ட் கொல்லப்பட்டார், எட்வர்டு உயிரோடு வாழ்ந்தார்.

இரண்டு ஜனாதிபதிகளுமே தங்கள் மனைவியருடன் இருக்கும் போதுதான் கொல்லப்பட்டார்கள். இருவருக்கும் பின் தலையில்தான் குண்டடிபட்டது. இருவருமே வெள்ளிக்கிழமையன்றுதான் சுடப்பட்டார்கள்.

லிங்கனைக் கொன்ற ஜான் வில்கிஸ் பூத், கென்னடியைக் கொன்ற லீ ஹார்வி ஆஸ்வால்ட் இருவருமே தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், இருபது முதல் முப்பது வயதிற்குள் இருந்தவர்கள்.

லிங்கன் தியேட்டரில் உட்கார்ந்திருக்கும் போது அவரைச் சுட்ட பூத் பண்டக சாலை (வேர் ஹவுஸ்) யில் பதுங்கியிருக்கையில் பிடிபட்டான். கென்னடி பண்டக சாலையில் இருக்கும்போது அவரைச் சுட்ட ஆஸ்வால்ட் தியேட்டரில் பதுங்கியிருக்கும்போது பிடிபட்டான்.

லிங்கன் 1860-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார். கென்னடி 1960ல் பதவியேற்றார்.

லிங்கனின் செயலாளர் பெயர் கென்னடி, கென்னடியின் செயலாளர் பெயர் லிங்கன்.

மேரி லிங்கனும், ஜாக்கி கென்னடியும் வெள்ளை மாளிகையில் வாழ்ந்த காலத்தில் தான் தங்கள் மகன்களை மரணத்திற்கு பரிசளித்தார்கள்.

லிங்கனை அடுத்து பதவியேற்ற ஆன்ட்ரூ ஜான்சன் 1808-ல் பிறந்தவர். கென்னடியை அடுத்துப் பதவியேற்ற லிண்டன் ஜான்சன் 1908-ல் பிறந்தவர். இவர்கள் இருவருமே அமெரிக்க செனட்டில் பதவி வகித்தவர்கள்.

கென்னடி-லிங்கன்- பெயரில் ஏழு எழுத்துக்கள். அவர்களை அடுத்துப் பதவியேற்ற ஆன்ட்ரூ ஜான்சன் - லிண்டன் ஜான்சன் இருவரின் பெயரில் 13 எழுத்துக்கள் இருக்கும்.

கென்னடி - லிங்கனை கொலை செய்த ஜான் வில்கிஸ் பூத் - லீ ஹார்வி ஆஸ்வால்ட் இருவருக்கும் பெயரில் 15 எழுத்துக்கள்.
Via Link

இறந்த பிறகும் (???) இமெயில் அனுப்பலாம் - அட இது சத்தியமுங்கோ

என்ன இது? இறந்த பிறகு யார் அனுப்புவார்கள்? முதலில் எப்படி கடிதம் எழுத முடியும்? யாருடைய இமெயில் அக்கவுண்ட்? என்ற சந்தேகமும், சிரிப்பும், ஒரு வேளை முடியுமோ என்ற எதிர்பார்ப்பும் உங்களிடம் எழுகிறதா? ஆம் முடியும். இணையத்தில் எதுவும் முடியும் என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டு. நீங்கள் இறந்த பிறகு நீங்கள் முன்பே தயார் செய்து வைத்த இமெயில் கடிதங்கள் உடனே துப்பாக்கி முனையில் இருந்து கிளம்பும் தோட்டாக்கள் போல நீங்கள் யாருக்கு எழுதினீர்களோ அவர்களுக்குச் செல்லும். இந்த தளத்தினை http://www.farawayfish.com என்ற முகவரியில் காணலாம். முதலில் இதற்கான கட்டாயம் அல்லது சூழ்நிலை என்ன என்று பார்ப்போம்.

நாம் என்றாவது ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். அதுவும் எதிர்பாராத தருணத்தில். பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று பல விஷயங்களை நம் மனதில் வைத்திருப்போம். பேங்க் அக்கவுண்ட், லாக்கரில் இருக்கும் பணம், டாகுமெண்ட் மற்றும் நகை, பணம் கொடுத்து இன்னும் பதியாமல் இருக்கும் நிலம் மற்றும் வீடு, யாரை எல்லாம் நம்பக் கூடாது, எப்படி வாழ வேண்டும் என்று பிள்ளைகளுக்கு அறிவுரை, யாரை அவர்கள் கடைசி வரை காப்பாற்ற வேண்டும், நன்றியுடன் இருக்க வேண்டும் என்ற இவை எல்லாம் உயிருடன் இருக்கையில் கொட்டித் தீர்த்துவிட முடியாது. ஆனால் திடீரென மரணம் சம்பவித்தால் என்ன செய்திட முடியும்? உயில் எழுதினால் தெரிந்துவிடாதா? யாரையாவது நம்பி எழுதி வைத்து இறந்தால் அவர் நம்பிக்கை மோசம் செய்துவிடமாட்டாரா? இந்த பதட்டத்திற்குத்தான் நமக்கு உதவிட வந்துள்ளது மேலே சொன்ன முகவரியில் உள்ள தளம். இந்த தளத்திற்குச் சென்றால் நம்மைக் கவரும் ஓர் இடம் – நீங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள், மாதங்கள் உயிர் வாழ்வீர்கள் என்று ஒரு கணக்குப் போட்டு சொல்லும் இடம் தான். உங்கள் பெயர், வயது, ஆண் மற்றும் பெண் போன்ற விபரங்களைக் கேட்ட பின் நீங்கள் புகை பிடிக்கிறீர்களா? மது குடிக்கிறீர்களா? உங்கள் எடை மற்றும் உயரம் என்ன என்று கேட்டு இத்தனை ஆண்டுகள் நீங்கள் உயிர் வாழலாம் என்று ஹேஷ்யமாக ஒரு கணக்கிட்டுச் சொல்கிறது. ஆண்டுக் கணக்கை அடுத்து அதனை எத்தனை நொடிகள் என்றும் ஒரு கடிகாரக் கணக்கு மாதிரி காட்டுகிறது. இதில் நம் மரணத்திற்கு விதித்த காலம் நொடிகளில் குறைவதைக் காண மனதிற்குப் பக் என்கிறது.
சரி, முக்கிய விஷயத்திற்கு வருவோம். இந்த தளத்தில் பதிந்து கொண்டால் உங்கள் இமெயில் முகவரிக்கு ஒரு லிங்க் அனுப்பப்படுகிறது. அதனைக் கிளிக் செய்தால் இந்த தளத்தில் உங்களுக்கென ஒரு பக்கம் ஒதுக்கப்படுகிறது. இதில் உங்களின் எண்ணங்களைப் பதிந்து வைக்கலாம். உங்கள் கொள்கைகளை எழுதி வைக்கலாம். அவை நீங்கள் இறந்த பின்னர் மற்றவர்களுக்கு அறிவிக்கும் வகையில் ஓர் இணைய தளமாகக் கிடைக்கும். பத்து ஆண்டுகளுக்கு இவை இணைய வெளியில் இருக்கும்.

அடுத்ததாக நீங்கள் யாருக்கெல்லாம் உங்கள் செய்தியை, எண்ணங்களை, அறிவுரையை, அவர்கள் செய்ய வேண்டிய வேலையை அறிவுறுத்த வேண்டுமோ அவர்களின் இமெயிலுக்கு அதனை செய்தியாக கடிதம் எழுதி வைக்கலாம். இவை உங்களுக்கென ஒதுக்கப்பட்ட தளத்தில் பாதுகாக்கப்படும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மட்டும் இதனை எடிட் செய்து மாற்றலாம்; புதிய செய்திகளை தகவல்களை இணைக்கலாம். இத்தனை மெயில்களை இதுவரை நீங்கள் சேமித்து வைத்துள்ளீர்கள் என்று விவரங்கள் உங்களுக்குக் காட்டப்படும்.

சரி, இந்த செய்திகள் நீங்கள் இறந்த பின்னர் எப்படி மற்றவர்களுக்கு அனுப்பப்படும்? முதலில் செய்திகளை அமைக்க எப்படி இடம் ஒதுக்கப்படும். இந்த தளத்தில் நுழைந்தவுடன் உங்கள் பெயர், இமெயில் முகவரி, பாஸ்வேர்ட் ஆகியவற்றைப் பதிந்தால் நீங்கள் தரும் இமெயில் முகவரிக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும். அதனைக் கிளிக் செய்தால் அந்த தளத்தில் உங்களுக்கென ஒரு பக்கம் ஒதுக்கப்படும். இங்கு தான் நீங்கள் எழுதும் எண்ணங்களும் தகவல்களும் மற்றும் அமைத்திடும் இமெயில் செய்திகளும் பாதுகாக்கப்படும். பாடல்களைப் பதிந்து வைக்கலாம்; வீடியோ காட்சிகளையும் இதில் பதியலாம்.
அடுத்ததாக யார் இந்த இமெயில் செய்திகளை அனுப்புவார்கள். நீங்கள் உங்களுக்கு நம்பிக்கையான மூன்று பேர் குறித்த தகவல்களையும் இமெயில் முகவரிகளையும் அனுப்ப வேண்டும். இவர்களை இன்பார்மர்கள் என இந்த தளம் அழைக்கிறது. இவர்கள் தான் நீங்கள் இறந்தவுடன் இந்த தளத்திற்கு செய்தி அனுப்புபவர்கள். இவர்களுக்கு இந்த தளத்தை நிர்வகிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற தகவல்களையும் பாஸ்வேர்ட் ஒன்றையும் பாதுகாப்பான லிங்க் ஒன்றையும் அனுப்பி வைப்பார்கள். உங்களின் உயிர் நண்பர்களாக, உறவினர்களாக இவர்கள் செய்ய வேண்டிய ஒரே செயல் நீங்கள் இறந்தவுடன் இவர்களுக்கு தெரிவிக்க வேண்டியதுதான். உடனே இந்த தளம் மூன்று பேருக்கும் தகவல் அனுப்பி நீங்கள் இறந்ததை உறுதி செய்யும். ஏன், உங்கள் இமெயில் முகவரிக்கும் தகவல் அனுப்பி உறுதி செய்யப்படும். 12 வகையான சோதனை 18 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே நீங்கள் எழுதி வைத்த தகவல்கள் அடங்கிய தளம் உலகிற்கு காட்டப்படும். நீங்கள் எழுதி வைத்த இமெயில்கள் (இலவச சேவையில் 25 பேருக்கு அனுப்பலாம்) சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும். இத்தனை நிலைகள் இருந்தாலும் அனைத்துமே நாம் மேற்கொள்ளும் வகையில் எளிமையானதாக உள்ளன. இறந்த பிறகு இறவாப் புகழ் பெற இந்த தளத்தை அணுகலாம். உங்களின் இறுதி செய்திகள் உற்றவர்களுக்கு உங்களுக்குப் பின் சென்று சேர இதனைப் பயன்படுத்தலாம். இலவசமாக இதனைப் பயன்படுத்த எண்ணினால் ஓர் ஆண்டுக்கு மட்டுமே முடியும். அதாவது பதிந்து ஓர் ஆண்டில் நீங்கள் இறந்துவிட்டால் இலவசமாக செயல்படுத்தப்படும். அதற்கும் மேலான காலத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

இதன் சிறப்புகளைப் பார்ப்போம்: நீங்கள் அமைத்திடும் செய்திகள் மற்றும் இமெயில்களை உங்களைத் தவிர யாரும், இன்பார்மர்கள் உட்பட, பார்க்கவோ படிக்கவோ எடிட் செய்திட முடியாது. இறப்பதற்கு முன் தானாக இவை அனுப்பப்பட்டுவிடுமா? நிச்சயம் 100% இல்லை. பல வகையான சோதனை மேற்கொண்ட பின்னர், இறந்தது உறுதி செய்யப்பட்ட பின்னரே செய்திகள் அனுப்பப்படும். உங்கள் இன்பார்மார்கள் மூன்று பேரும் இணைந்து தவறு செய்தால் தான் பிரச்சினை ஏற்படும். அப்போதும் இந்த தளம் சில ரகசிய சோதனைகளை மேற்கொள்ளும். இன்பார்மர்களை மிகக் கவனத்துடன் தேர்ந்தெடுத்து தளத்திற்கு அறிவியுங்கள். இவர்களை மாற்ற வேண்டும் என இடையே எண்ணினால் மாற்றலாம். தள நிர்வாகிகள் இவர்களுடன் பேசி இந்த வேலை எவ்வளவு முக்கியம் என்று எடுத்துக் கூறுவார்கள்.
இலவச சேவை எனில் உங்கள் தளம் மரணத்திற்குப் பின் ஓராண்டும் கட்டண சேவை எனில் 9 ஆண்டுகளும் இருக்கும். உங்கள் நண்பர்கள் யாரேனும் தொடர்ந்து பணம் செலுத்தினால் இணையத்தில் தொடர்ந்து உங்கள் தளம் இடம் பெறும். நீங்கள் சேவ் செய்து வைத்த பைல்களின் பார்மட்டுகள் காலப்போக்கில் மாறுதல் அடைந்தால் தளம் அவற்றை அப்டேட் செய்திடும். நீங்கள் செலுத்தும் பணத்திற்கு ஒப்புதல் பற்றுச் சீட்டினை இந்த தளம் வழங்கிடும். எனவே பணத்திற்குப் பாதகமில்லை.

இன்பார்மர்களிடம் நான்கு முறை இமெயில் மூலம் பல வழிகளில் கேட்கப் பட்ட பின்னரே உங்கள் கடிதங்களை அனுப்ப அனுமதி வழங்கப்படும். உங்கள் இமெயிலுக்கும் பல முறை இமெயில் அனுப்பப்பட்டு மரணம் உறுதி செய்யப் படும். சற்று கூடுதலாக கட்டணம் செலுத் தினால் எஸ்.எம்.எஸ். மூலமும் மரணம் உறுதி செய்யப்படும். உங்களுடைய பாஸ்வேர்ட் மற்றும் பின் எண் மறந்து போனால் தளத்திற்கு தகவல் தெரிவித்தால் அவை அறிவிக்கப்படும்.

வலைப்பூவிற்கு இலவச காப்புரிமை

முன்னதாகவே இது பற்றி ஒரு பதிவை பிரசுரித்திருந்தேன். இங்கே சென்று அதனை வாசித்துக்கொள்ளுங்கள். இப்பதிவு, சட்டபூர்வமாக பயன்படுத்தும் வகையில், அதுவும் இலவசமாக எப்படி காப்புரிமை பெறுவது என்பது பற்றியது.

சட்டபூர்வமான முறையில் காப்புரிமை பெறுவதற்கு நீங்கள் www.copyright.gov என்ற தளத்திற்க்கு சென்று $35.00ஐ கட்டணமாக கட்டுவதன் மூலம் இலத்திரனியல் ரீதியிலான முறையில் காப்புரிமையை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அவ்வாறு ஒரு தொகை செலுத்தி காப்புரிமை பெறும் வசதி இல்லை. அதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தளம்தான்
 MyFreeCopyright.com  இதன் மூலம் வழங்கப்படும் காப்புரிமை உத்தியோகபூர்வமானது அல்ல. ஆனால் அதனை உங்களது சட்டபூர்வமான தேவைகளுக்கு எந்த ஒரு தடையுமின்றி பயன்படுத்திகொள்ளலாம். நீங்கள் பிரசுரித்த ஆக்கம் அசலானது என்பதை உறுதிப்படுத்த உங்களுக்கு தேவையானது பிரசுரித்த திகதி. அத்துடன் "என்னுடைய ஆக்கம்தான் உறுதியானது" என்று நீங்களாகவே சொல்லமுடியாது. அப்படி சொல்வது, நீதிமன்ற கூண்டில் நிற்கும் நிரபராதி, எந்த ஒரு சாட்சியுமின்றி "நான் குற்றவாளி இல்லை" என்று கத்துவது போலானதாகும். உங்களை உண்மையானவர் என்று நிரூபிக்க ஒரு மூன்றாவது நபரின் சாட்சி நிச்சயம் அவசியம். இதேபோல், உங்களது ஆக்கம்தான் உண்மையானது என்பதை உறுதிப்படுத்தும் ஒரு மூன்றாவது நபர் தான் MyFreeCopyright.com.

MyFreeCopyright.comஇல் காப்புரிமை பெறுவது எப்படி?

முதலில் இத் தளத்தில் ஒரு உறுப்பினராக உங்களைப் பதிவுசெய்துகொள்ளவேண்டும். அவ்வாறு பதிவு செய்த பின்னர் "PROTECT MY CREATION" என்பதை அழுத்தவும். 
 பின்னர், "BLOG/PODCAST" என்பதை தெரிவு செய்யவும்.  இத்தளத்தில் வலைப்பூ தவிர படங்கள், கவிதைகள், e-book மற்றும் ஒலி, ஒளி சார்ந்த படைப்புகளுக்கும் பதிப்புரிமை பெற்றுக்கொள்ளலாம். 
அடுத்ததாக தோன்றும் திரையில் உங்களது வலைப்பூவின் Feed urlஐ கொடுக்கவும். வலைப்பூ ஒன்றின் பொதுவான Feed Url வடிவம்: http://blogname.blogspot.com/feeds/posts/defaul  இறுதியாக அவர்கள் தரும் HTML  நிரற்தொடரை (code) உங்கள் தளத்தில் நிறுவிக்கொள்ளவேண்டும்.


MyFreeCopyright.com எவ்வாறு தொழிற்படுகின்றது?

பதிப்புரிமை செய்யப்பட்ட உங்களது இணையத் தள முகவரி பின்வருமாறு தோற்றமளிக்கும. (
copyright - இது பொதுவான ஒன்று.

Registered - இது நீங்கள் உங்களது வலைப்பூவை பதிவு செய்த நேரத்தை குறிக்கின்றது. நீங்கள் ஒரு ஆக்கத்தை பிரசுரித்த பின்னர், முடிந்தளவு விரைவாக பதிவு செய்து கொள்ளுங்கள்.

Fingerprint - உங்கள் வலைப்பூ காப்புரிமை செய்யப்பட்டதற்கு மிக மிக முக்கிய சான்றாக எண்ணியல் (Digital) முறையில் வழங்கப்படும் இலக்கத் தொடர். இது தனித்துவமானது. (A digital fingerprint, also know as a digest, is a hash value created by a hash algorithm. The 256-bit Secure Hash Algorithm is used by MyFreeCopyright.com and is an industry standard way of creating a fingerprint of a file. The algorithm mixes and chops the data of a file to create a unique string of numbers and letters based on the files makeup.)

Title - காப்புரிமம் செய்யப்பட்ட ஆக்கத்தின் தலைப்பு

Entry - காப்புரிமம் செய்யப்பட்ட ஆக்கத்தின் முழு வடிவம். (Complete Textual View)

MCN (My Copyright Number) - MyFreeCopyright.com இல் காப்புரிமை செய்யப்பட்டதற்க்கு சான்றாக வழங்கப்படும் இலக்கம். (The MCN is a unique number that is assigned to all Copyrights Registered with MyFreeCopyright.com. This number will not change and will always be assigned to your copyright. The MCN gives you a quick lookup and historical proof of your Copyright registration. With the MCN you can easily and conveniently prove you are Registered & Protected. )

விஷேட அம்சம்

ஒரு தளத்தை காப்புரிமை செய்த மறு வினாடி அதனுடைய பிரதி MyFreecopyright.com இனால் உங்களது மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். அந்த மின்னஞ்சல் உங்களுக்கு இன்னுமொரு சாட்சியாக தொழிற்படும். மின்னஞ்சல் அனுப்பப்பட்ட திகதி  = காப்புரிமை செய்த திகதி. அதிலுள்ள எண்ணியல் கை ரேகை  = ஆக்கத்தின் காப்புரிமை சான்று. காப்புரிமை பிரதி வந்தடைந்த மின்னஞ்சல் = உங்களது மின்னஞ்சல் = ஆக்கம் / கட்டுரை உங்களுடையது என்பதை  மீளுறுதிப்படுதுகின்றது. 

இதனை சட்டபூர்வமான தேவைகளுக்கு பயன்படுத்தலாமா?

நிச்சயமாகப் பயன்படுத்தலாம். அதிலும் குறிப்பாக உங்களது கட்டுரையின் போலிப் பிரதி பற்றி DMCAக்கு முறைபாடுகளை அனுப்பும் பொது இதனை ஒரு சாட்சியாக பயன்படுத்தலாம். DMCA என்பது Digital Millenium Copyright Act என்பதாகும். இது எண்ணியல் முறையில் உருவாக்கப்பட்ட ஆக்கங்களின் காப்புரிமை தொடர்பான ஒரு சட்டம். உங்களது ஆக்கத்தின் போலிப்பிரதி பற்றிய சகல முறைபாடுகளையும் நீங்கள் இத்தளத்துக்கு அனுப்பிவைக்கலாம். அதற்குரிய விண்ணப்பப்படிவம் கூகிள் முதற்கொண்டு இணையதள சேவை வழங்கும் (Domain, Hosting, Server, Internet Advertisement, etc) எந்த ஒரு நிறுவனத்திடமும் உங்களது ஆக்கம் தொடர்பான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ய முற்படும் பொழுது பெற்றுக்கொள்ளலாம்.
 உங்களது காப்புரிமையை மேலும் உறுதிப்படுத்த விரும்பினால் DMCA இல் உறுப்பினராக இணைந்து கொள்ளலாம். உங்களது வலைத்தளம் DMCA இன் உறுப்பினர் என்பதை உறுதிப்படுத்த அந் நிறுவனத்தால் வழங்கப்படும் இலச்சினையை(Logo) உங்கள் தளத்தில் நிறுவ வேண்டும். DMCA பற்றி வேறு ஒரு பதிவில் விளக்கமாக கூறுகின்றேன் ♥

Piracy Software ஏன்? எதற்கு? எப்படி?

'எதுக்கு சார் பத்தாயிரம் 20 ஆயிரம்னு காச கரியாக்குறீங்க...என்ன வேணும்னு சொல்லுங்க, அதையே 100 ரூபாய்க்கு தர்றோம். ஒரிஜனல விட சூப்பரா இருக்கும். 2 க்கு மேல வாங்குனீங்கன்னா எக்ஸ்ட்ரா ஓண்ணு ஃப்ரீயா தர்றோம்...ரேட் பாத்து பண்ணிக்கலாம் சார்' இது வெளிநாட்டு பொருட்களின் போலிகளை வாங்க முற்படுவோரிடம் விற்பனையாளர் பேசும் டயலாக் இல்லை... சில ஆயிரங்கள் முதல் பல்லாயிரம் ரூபாய் வரை விலை கொண்ட சாஃப்ட்வேர்களின் பைரஸி எனப்படும் போலிகளை விற்பனை செய்யும் விற்பனையாளரின் வியாபாரப் பேச்சு. 

வீட்டுக்குள் அல்லது சிறிய அளவில் கம்ப்யூட்டரை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் சாஃப்ட்வேர்கள் மற்றும் ஆபரேடிங் சிஸ்டம்களில் 90 சதவீதம் போலியானவை. மிகுந்த சிரத்தையுடன் பல மாதங்கள் ஆய்வுசெய்து வடிவமைக்கப்படும் ஆபரேடிங் சிஸ்டம்கள் மற்றும் சாஃப்ட்வேர்களைக் காட்டிலும், அவற்றின் பைரஸிகளுக்கு மவுசு அதிகமாக இருப்பது ஏன்? அசல் மென்பொருள்களைப் புறக்கணித்துவிட்டு, அவற்றின் போலிகளின் விற்பனை அதிகரிக்கக் காரணம் என்ன? இதற்கான காரணத்தை தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பார்வையில் அலசாமல், சாதாரண பயனாளர் ஒருவரின் பார்வையிலிருந்து பார்த்தால், பைரஸிகளுக்கான சரியான காரணம் புரிந்து விடும்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் மட்டுமல்ல...ஆடி மாதத்தில் கூட தள்ளுபடி என்ற பெயரில் டி.வி, உள்பட அனைத்து எலெக்ட்ராணிக்ஸ் மட்டுமின்றி குண்டூசிகளின் விற்பனையும் களைகட்டும். தங்களது தயாரிப்புகளை இந்தந்த இடங்களில், இந்தந்த விலைகளில் வாங்கலாம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து கண்காட்சிகள் மூலமும், பெரிய கடைகளில் காட்சிப்பொருளாக்கியும் விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் , டி.வி, பெட்டிக்கு சமமாக அனைத்து வீடுகளையும், அலுவலகங்களையும் அலங் கரித்துவரும் கம்ப்யூட்டர்களுக்கு முதுகெலும் பாக செயல்படும் ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் முக்கிய சாஃப்ட்வேர் தொகுப்புகள் எங்கு விற்பனை செய்யப்படுகின்றன மற்றும் அவற்றின் விலை என்னவென்று சாதாரண பயனாளருக்கு துல்லியமாக, விரிவாக கூற எவரும் முன்வருவதில்லை. பைரஸி சாஃப்ட்வேர்கள் வைத்திருப்பது தண்டனைக்குரியது என கூறிக்கொள்ளும் மைக்ரோசாஃப்ட் உள்பட பெரிய நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகள் மற்றும் அவற்றின் நன்மைகளைப் பற்றி இதுவது பொதுமக்களுக்கு புரியவைத்து (மற்ற எலெக்ட்ராணிக்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் செய்வது போல) அசல் மென்பொருள்கள் பற்றிய தெளிவை இதுவரை ஏற்படுத்த, ஏனோ தயக்கம் காட்டுகின்றன. அட்டகாச தள்ளுபடிகள், அதிரடி சலுகைகள் என கவர்ச்சி விளம்பரங்கள் அளிக்காமல், 'இந்த தயாரிப்புக்கான விலை இது...இதை வாங்கினால் இதுபோன்ற பயன்களைப் பெறலாம்' என விளம்பரங்களை (அவுட்லுக், வீக் போன்ற மேல்தட்டு பத்திரிகைகளில் அல்ல) பொதுமக்களுக்கு புரியும் படி பத்திரிகைகளில் விரிவாக அளிக்கலாம். ஆனால் அதைச் செய்ய நிறுவனங்களால் முடிவதில்லை. அசல் மென்பொருள்களை அலைந்து திரியாமல் எங்கு வாங்குவது, அவற்றின் விலைப்பட்டியல் மற்றும் என் னென்ன பயன்கள் என்பதை விளக்க யாரும் இல்லாததால் பயனாளர்கள் வேறு பாதை தெரி யாமல் பைரஸியின் பக்கம் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

அசல் மென்பொருள் மற்றும் ஆபரேடிங்சிஸ்டம் தான் பயன்படுத்துவேன் என அடம்பிடிக்கும் பயனாளர்களிடம் கம்ப்யூட்டர் டீலர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூறும் அறிவுரை தான் இக்கட்டுரையின் முதல் பாராவில் நீங்கள் படித்தது... அடுத்து, அதன் விலை.... அசெம்பிள் செய்யப்படும் கம்ப்யூட்டரின் விலைக்கும், நிறுவன தயாரிப்பு கம்ப்யூட்டர்களுக்கும் அதிக விலை வித்தியாசமில்லை. தற்போதுள்ள சூழலில் தரமான கம்ப்யூட்டர்கள் கூட 30 ஆயிரத்து சொச்சத்தில் கிடைத்து விடுகின்றன. ஆனால் அவற்றில் ஒன்று அல்லது இரண்டு அசல் சாஃப்ட்வேர்களை உள்ளிட வேண்டுமெனில், கம்ப்யூட்டர்களின் மொத்த விலைக்கு இணையாக பணம் கொடுக்கவேண்டியிருக்கிறது. விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டமின் விலை சற்று குறைவாக இருந்தாலும், மற்ற சாஃப்ட்வேர்களின் விலை மிக அதிகமாக இருப்பதால் அவற்றின் பக்கம் செல்வதற்கு, சிறிய நிறுவனங்கள் மற்றும் சாதாரண பயனாளர்கள் அச்சம் கொள்கின்றனர். இதை சாதகமாக்கிக்கொண்டு, அசெம்பிள் கம்ப்யூட்டர் விற்பனையாளர்கள் மற்றும் சர்வீஸ் இன்ஜினியர்கள் சர்வ சாதார ணமாக பைரஸி சாஃப்ட்வேர்களை தயாரித்து சகட்டுமேனிக்கு விற்றுத் தள்ளுகின்றனர். இவை அனைத்தையும் அறிந்திருந்தும், தடுக்க வழிகள் தெரிந்திருந்தும் அவற்றை நடைமுறைப்படுத்தாமல் நிறுவனங்கள் பார்த்துக்கொண்டிருப்பது தான் வேடிக்கை. 

வீட்டில் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒரு சிலர் பைரஸி சாஃப்ட்வேர் வாங்குவதால், தங்கள் தயாரிப்புக்கு எந்த பாதிப்பு வராது என்றும், அசல் மென்பொருள்கள் வாங்குவதில் உறுதியாக இருக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிப் பயனாளர்கள் இருக்கும் வரை தங்களுக்கு கவலையில்லை என்றும், நிறுவனங்கள் திட்டவட்டமாக நம்புகின்றன.பைரஸி பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பயனாளர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் கூட, அசல் மென்பொருள்களின் உரிம சிக்கல்கள் மற்றும் துரிதமற்ற சேவை ஆகியவற்றால் வெறுத்துப் போய் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முழு சுதந்திரம் அளிக்கும் ஓப்பன் சோர்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்த முனைகின்றனர். இனியும் , கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான விற்பனையை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால்... அசல் மென்பொருள்கள் என்பது வெறும் மாஸ்டர் காப்பியாக மாறி, பைரஸி சாஃப்ட்வேர்கள் தான் அசலானவை என்ற நிலை உருவாகிவிடும்!

தேடு பொறி (Search Engine) பயன்படுத்தும் போது தவிர்க்க வேண்டியவை

நம் கம்ப்யூட்டருக்குள் மால்வேர் புரோகிராம்கள் நுழைந்து நம் பெர்சனல் தகவல்களைத் திருடி அனுப்புவது ஒரு வகை திருட்டு. ஆனால் சர்ச் இஞ்சின்களில் நாம் தகவல்களைத் தேடுகையில் பல இஞ்சின்கள் நம்முடைய பெர்சனல் தகவல்களைத் திருடும் வாய்ப்பு உள்ளதே” இந்தக் கோணத்தில் பிரச்சினையை அணுகுகையில் ஏன் இது நடக்கக் கூடாது என்ற சந்தேகம் நமக்கு எழும்புகிறது. அதே நேரத்தில் சர்ச் இஞ்சின்கள் நம் கம்ப்யூட்டரில் உள்ள பெர்சனல் தகவல்களை நிச்சயம் திருடாது என்ற நம்பிக்கையும் கிடைக்கிறது. இருப்பினும் நாம் தகவல்களைத் தேடுகையில் பின்னணியில் என்ன நடை பெறுகிறது என்று யாருக்குத் தெரியும். எனவே ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் நாம் ஓரளவிற்கு பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் இயங்கலாமே. அத்தகைய நடவடிக்கைகள் குறித்து இங்கு காணலாம்.

முதலிலிருந்து இங்கு பார்ப்போம். ஒவ்வொரு முறை நீங்கள் ஒரு சர்ச் இஞ்சினைப் பயன்படுத்துகையில் (யாஹூ, கூகுள் போன்றவை) நீங்கள் தேடுதலுக்குப் பயன்படுத்தும் அனைத்து சொற்களையும் அவை டேட்டாவாக ஸ்டோர் செய்கின்றன. அத்துடன் நாம் செல்லும் அனைத்து தளங்களையும் தகவல்களாகப் பதிவு செய்து கொள்கின்றன. நாம் எந்த நாளில் எந்த நேரத்தில் இவற்றைத் தேடுகிறோம் என்ற தகவல்களையும் எடுத்துக் கொள்கின்றன. ஏன், நம் ஐ.பி. முகவரியைக் கூட இவை பதிந்து வைத்துக் கொள்கின்றன என்பதே உண்மை. இவற்றிலிருந்தே இந்த சர்ச் இஞ்சின்கள் நாம் எத்தகைய மனப்பாங்கு உள்ளவர்கள், இணையத்தை எதற்கெல்லாம் பயன்படுத்துகிறோம், நம் விருப்பங்கள், வெறுப்புகள் ஆகியவற்றைக் கணக்கிட்டுக் கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இது நம் பெர்சனல் வாழ்க்கையில் ஒருவர் தலையிடுவதைப் போல்தான். ஆனால் வேறு வழியில்லையே என்று நாம் அலுத்துக் கொள்ள வேண்டியதுள்ளது. இருப்பினும் இதிலிருந்து தப்பிக்கும் வழிகள் சிலவற்றை இங்கு காணலாம்.

1. சர்ச் இஞ்சினில் லாக் இன்,கூடுதல் வசதிகள் வேண்டாம்:
 
எந்த சர்ச் இஞ்சினில் நுழைந்தாலும் அதில் லாக் இன் செய்திட வேண்டாம். அவ்வாறு உங்கள் அடையாளத்தைக் கொண்டு உள்ளே நுழைந்தால் உடனே உங்களைப் பற்றிய குறிப்புகள் அங்கே செல்கின்றன. இதனை எப்படித் தவிர்க்கலாம்? சர்ச் இஞ்சின் தரும் கூடுதல் வசதிகள் எதனையும் பெறாதீர்கள். எடுத்துக்காட்டாக நீங்கள் கூகுள் சர்ச் இஞ்சினை வேறு எந்த தொடர்பும் இன்றிப் பயன்படுத்தினால் நம்மைப் பற்றிய தகவல் எதுவும் செல்லாது. ஆனால் அதன் கூகுள் டாக், ஜிமெயில், கூகுள் குரூப் போன்றவற்றைப் பயன்படுத்தினால் நம்மைப் பற்றிய தகவல்களை நாம் அதனிடம் கொடுத்துத்தான் ஆக வேண்டும். எனவே சர்ச் இஞ்சினில் தேடும் முன் இத்தகைய வசதி தரும் அனைத்து புரோகிராம்களிலிருந்தும் லாக் அவுட் செய்து விடுபட்டு வெளியே வரவும். இதனை அனைத்து சர்ச் இஞ்சின்களிலும் மேற்கொள்ள வேண்டும்.

2. கூகுளைவிட்டு விலகிச் செல்லுங்கள்:
 
நம்மில் பலர் கூகுள் சர்ச் இஞ்சினைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். ஆனால் இதில் ஆபத்து உள்ளது என்று பலருக்குத் தெரியாது. கூகுள் சற்று வித்தியாசமாகத்தான் தன் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. நம் தேடுதல் வேலையின் போது குக்கிகளைப் பயன்படுத்தி நம்மை அறிந்து கொள்கிறது. குக்கிகளை அழித்துவிட்டால் இந்த பிரச்சினை சரியாகிவிடும் என்று எண்ணுகிறோம். அனைத்து குக்கிகளையும் அழிப்பது நமக்கு சில வசதிகள் கிடைக்காமல் செய்துவிடும். எனவே கூகுள் ஏற்படுத்தும் குக்கிகளை மட்டும் நீக்கிவிடலாம் அல்லது தடுத்துவிடலாம்.

இதற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools, Internet Options செல்லவும். இதில் Privacy என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Sites என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து Address of the Website என்ற கட்டத்தில் கூகுள் தளத்தின் முகவரியினை (www.google.com) டைப் செய்திடவும். டைப் செய்து முடித்தவுடன் Block என்ற பட்டனில் கிளிக் செய்து முடிக்கவும்.

பயர்பாக்ஸ் பிரவுசரில் Tools தேர்ந்தெடுத்து Options செல்லவும். இங்கும் Privacy டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் Exceptions என்பதில் கிளிக் செய்து அதில் கூகுள் தளத்தின் முகவரியினை டைப் செய்திடவும். முடித்தவுடன் Block என்பதில் கிளிக் செய்து முடிக்கவும்.

மேலே கூறிய செட்டிங்ஸ் முடித்துவிட் டால் கூகுள் தளத்தால் உங்கள் கம்ப்யூட்டரில் குக்கிகளைப் பதிய முடியாது. இதனால் உங்களைப் பற்றிய தகவல்களைச் சேர்க்க முடியாது.

3. உங்கள் ஐ.பி. முகவரியை மாற்றவும்:  
சர்ச் இஞ்சின்கள் உங்களைப் பற்றிய தகவல் களைப் பெரும்பாலும் உங்கள் ஐ.பி. முகவரியினைக் கொண்டே பெறுகின்றன. எனவே உங்கள் ஐ.பி. முகவரியை அடிக்கடி மாற்றுங்கள். நீங்கள் கேபிள் அல்லது டி. எஸ்.எல். மோடம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் ஐ.பி. முகவரியை மாற்றுவது மிகவும் எளிது. உங்கள் மோடத்தினை சற்று நேரம் ஆப் செய்திடவும். சில நிமிடங் கள் கழித்து மீண்டும் ஆன் செய்து பயன்படுத்தவும். இதனால் உங்கள் பழைய ஐ.பி. முகவரி முற்றிலுமாக நீக்கப்பட்டு புதிய ஐ.பி. முகவரி உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் டயல் அப் வகை கனெக்ஷன் வைத்திருந் தால் உங்களுக்கு இன்டர்நெட் வசதி வழங் கும் நிறுவனத்திடம் உங்கள் ஐ.பி. முகவரி அடிக்கடி மாற்றப்பட்டு வழங்கப்படுவதனை உறுதி செய்து கொள்ளவும். இல்லை என்றால் மாற்றிப் பெறும் வழியை அவர்களிடமே கேட்டுப் பெறவும்.

4. தேடுதலில் பெர்சனல் தகவல்கள் வேண்டாமே:  
தேடுதலில் உங்கள் பெயர், முகவரி,ஊர் போன்ற தகவல்கள் இருக்க வேண்டாம். சிலர் வேடிக்கைக்காக தங்களின் பெயர்கள், இமெயில் முகவரிகள், முகவரி, ஊர் பெயர், கிரெடிட் கார்டு எண் போன்றவற்றை இணைத்து தேடுவார்கள்.

இது வேடிக்கைக்காக என்றாலும் இதன் மூலம் நீங்கள் உங்கள் பெர்சனல் தகவல்களை ஊர் அறிய அனுப்புகிறீர்கள் என்பது உறுதி. உங்கள் அடையாளங்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகளை நீங்களே வழங்குகிறீர்கள் என்பதுதான் இங்கு உறுதியாகிறது. உங்களைப் பற்றிய தகவல்கள் தவறானவர்களின் கைகளில் சிக்க வாய்ப்புகள் ஏற்படுகிறது.

5. பிற கம்ப்யூட்டர்களில் பெர்சனல் தேடுதல்கள்:
 
உங்களைப் பற்றிய தகவல்களுடன் நீங்கள் கட்டாயமாகத் தேடுதலை மேற்கொள்ள வேண்டும் என்றால் உங்கள் வீடுகளில் அல்லது அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர்களில் இந்த வகைத் தேடுதல்களை மேற்கொள்ள வேண்டாம். இதனால் பெரிய அளவில் பாதுகாப்பு என்ன கிடைக்கப் போகிறது என்று எண்ணலாம். உங்கள் வீடு அல்லது அலுவலகக் கம்ப்யூட்டரில் நீங்கள் தேடுதலை நடத்தியகையோடு வேறு புரோகிராம்களிலும் லாக் இன் செய்திடலாம். இதனால் தகவல்கள் ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படலாம். ஆனால் நீங்கள் இதுவரை பயன்படுத்தாத பிற இடத்தில் உள்ள கம்ப்யூட்டர் என்றால் வேறு புரோகிராம்களில் லான் இன் செய்வதனை நீங்கள் மேற்கொள்ளமாட்டீர்கள்.

6. உங்கள் ஐ.எஸ்.பி. தரும் சர்ச் இஞ்சின் வேண்டாம்:
இறுதியாக ஒரு ஆலோசனை. உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு வழங்கும் நிறுவனம் ஏதேனும் சர்ச் இஞ்சின் வசதியைத் தந்தால் அதனை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏற்கனவே உங்கள் ஐ.பி. முகவரி இருப்பதால் உங்களைப் பற்றிய அடிப்படை பெர்சனல் தகவல்களை அவர்கள் எளிதாகப் பெறலாம். அவர்கள் தரும் சர்ச் இஞ்சினைப் பயன்படுத்துவதன் மூலம் மேலும் சில கூடுதல் தகவல்களை நீங்கள் அவர்களுக்கு வழங்குகிறீர்கள். இதனைத் தவிர்க்கலாமே. உங்களுக்கு சர்வீஸ் வழங்கும் நிறுவனத்தை நம்பாமால் என்ன செய்வது என்று நீங்கள் கேட்கலாம். இருப்பினும் உங்கள் பாதுகாப்பு முக்கியம் அல்லவா.

மேலே சொன்ன அனைத்தையும் நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதில்லை. படித்து இவற்றை மேற்கொண்டால் பயன் இருக்கும், பாதுகாப்பு கிடைக்கும் என உணர்ந்தால் மேற்கொள்ளுங்கள்.

Googleஐ வீழ்த்துமா Facebook?

பேஸ்புக் இமெயில் சேவையை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.இதன் மூலம் இணைய ராஜாவான கூகுலின் ஜிமெயில் சேவையோடு மல்லுக்கட்ட தயாராகி உள்ள பேஸ்புக் மற்றொரு வ‌கையிலும் கூகுலுக்கு எதிராக வியூகம் வகுத்துள்ள‌து.அதாவது பேஸ்புக் தனது பயனாளிகளை பேஸ்புக்கை அவர்களின் முகப்பு பக்கமாக வைத்து கொள்ள கோரி வருகிறது.இதற்காக பிரத்யேக பட்டன் ஒன்றையும் அறிமுகம்செய்துள்ளது. 


தற்போது பெரும்பாலானோர் கூகுலையே முகப்பு பக்கமாக வைத்துள்ள‌னர்.அல்லது பலரும் முதலில் விஜயம் செய்யும் பக்கம் கூகுலாகவே இருக்கிற‌து.கூகுலின் சிற‌ப்பான தேடல் சேவையே இதற்கு காரண‌ம்.ஆனால் பேஸ்புக் இத‌னை மாற்ற‌ விரும்புகிற‌து. பேஸ்புக்கிலும் தேடல் வசதி உண்டு.அதோடு சமூக வலைப்பின்னல் சார்ந்த தேடலே எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்கின்ற‌னர்.எனவே இணையத்தின் சக்தி வாய்ந்த தளம் என்னும் பெருமையை கூகுலிடம் இருந்து தட்டிப்பறிக்க பேஸ்புக் காய்களை நக‌ர்த்துகிறது.

பிரபலங்களின் வாழ்வில் ......

சிக்கல்கள் இல்லாமல் சிகரத்தை அடைந்தவர்கள் யாருமில்லை. சரித்திரம் படைத்த ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பல சோதனைக் கதைகள் இருக்கின்றன. வெற்றியை விரும்பும் இளைஞர்கள் எத்தகைய சவால்களையும் சந்திக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இலக்கு இல்லாமல் யாரும் பயணிப்பதில்லை. ஆனால் பள்ளங்களை கடக்காமல் யாரும் மேட்டுக்கு செல்ல முடியாது. உயரம் எவ்வளவு அதிகமோ அதே அளவு பள்ளம் உயரத்தின் இருபுறமும் இருக்கிறது. உயரத்துக்கு செல்லவும் சவால்களைச் சந்திக்க வேண்டும். அதே உயரத்தை நிலைநிறுத்தவும் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உயரத்தில் இருந்து அதலபாதாளத்தில் விழ நேரிடும். எனவே எப்போதும் சவால்களுடன் போராடுவதே வாழ்க்கை.

இங்கு ஒரு கதை மூலம் விளக்குவது சரியாக இருக்கும்.

விவசாயி ஒருவர் வான்கோழி வளர்த்து வந்தார். அவரது மகளும் வான்கோழியிடம் பாசமாயிருந்தார். தானியங்கள் மற்றும் உணவை அளித்து செல்லமாக கவனித்துக் கொண்டனர்.

மூன்று ஆண்டுகளில் அந்த வான்கோழி கொழுகொழுவென வளர்ந்துவிட்டது. இதனால் வான் கோழியின் மனதில் இருந்து பயம் போய்விட்டது. நமது எதிர்காலம் முதலாளியால் சந்தோஷமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என்று வான்கோழி நினைத்தது. உண்மையிலேயே அவ்வளவு செல்லமாகவே வான்கோழியை விவசாயியின் குடும்பத்தினர் பராமரித்து வந்தனர்.

அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு விசித்திர வழக்கம். அதாவது ஏதாவது ஒரு குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மற்ற அனைத்து குடும்பத்தினருக்கும் விருந்து அளிக்க வேண்டும் என்பதுதான் அது. இந்தமுறை வான்கோழியை வளர்த்த விவசாயி குடும்பத்தார், பிறருக்கு விருந்தளிக்க வேண்டிய நிலை. வேறு வழியின்றி விவசாயி தான் வளர்த்த வான்கோழியை விருந்தாக்க முடிவு செய்தார்.

கதையில் வரும் வான்கோழியின் எண்ணத்தில் வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள். வாழ்க்கையின் சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் தங்களை யாராவது பாதுகாப்பார்கள் என்று கருதி இருந்தால் முடிவு எதிர்மறையாகவே அமைந்துவிடும். சமீபத்தில் ஏற்பட்ட உலக பொருளாதார மந்தநிலை இதற்கு சரியான உதாரணம்.

அமெரிக்க பொருளாதாரம் சற்றும் எதிர்பாராத வேளையில் திடீரென மந்தநிலைக்குச் சென்றது. உலக அளவிலும், அமெரிக்காவில் வாழ்பவர்கள் மத்தியிலும் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் எதிர்காலம் என்பது எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கும் என்று அவர்கள் நம்பியதுதான்.

பலரால் இந்த மாற்றத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள முடியவில்லை. பாதுகாப்பான வாழ்க்கைச் சூழலில் பயணித்தவர்களுக்கு எதிர்பாராத சவால்களை எதிர்கொள்வது எளிதில் சாத்தியமில்லாமல் போய்விட்டது.

மாணவர்களாக இருக்கும்போதும் சரி, வேலை உலகில் காலடி எடுத்து வைக்கும்போதும் சரி ஒவ்வொருவரும் சவால்களை எதிர்கொள்ள தங்களை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். சவால்கள் குறித்த பாடங்களை ஆசிரியர்கள் கருத்தாக கூறுவதோடு மட்டுமல்லாமல் அனுபவ ரீதியாகவும் அறிந்து கொள்ளச் செய்ய வேண்டும்.

சவால்களை எதிர்கொண்டு வெற்றி கண்ட சிலரைப் பற்றி கூறுவது நிச்சயமாக இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமையும். வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்ததாக ஆகும்போது சவால்களே வாழ்க்கை ஆகி விடுவதை காணலாம். பிரச்சினைகள் தான் சிலரை சிறப்பாக செயல்பட வைக்கிறது. இவ்வாறு சிறப்பாக செயல்படுபவர்கள் தங்களது தனித்திறமையாலோ, உடல் வலிமையாலோ இத்தகைய சிறப்பை வெளிப்படுத்த முடியாது. அவர்களது மனோபாவமும், அணுகு முறையுமே இத்தகைய தயார் நிலையை உருவாக்குகிறது.

நேருவின் வாழ்க்கையில்...

நேரு சுதந்திர போராட்ட காலத்தில் சுமார் பதிமூன்று ஆண்டுகள் சிறைவாசம் செய்தார். பல்வேறு குற்றங்கள் புரிந்து சிறைவாசம் இருந்தவர்களுடன் அவர் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. விஷ ஜந்துக்களான தேள், பாம்பு போன்றவையும் அந்தச் சிறையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒருமுறை சிறைக்கூடம் நிரம்பி வழிந்தபோது கால்நடைகளை பராமரிக்கும் கூடம் சிறையாக பயன்படுத்தப்பட்டது. அதிலும் நேரு தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

வசதியான குடும்பச் சூழலில் வளர்ந்த நேரு இவற்றையெல்லாம் பெரிதாக கருதவில்லை. அதற்கு மாறாக சிறைவாசத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி புத்தகங்களை எழுதினார். அவரது மனோபாவமும், எதிர்காலத்தை எதிர்கொண்ட திறனுமே அவருக்கு ஏற்பட்ட பல்வேறு இடர்களை சமாளிக்கும் ஆற்றலை அளித்தது. இத்தகைய தலைமைப் பண்பு என்பது அவரவருக்குள் இருந்தே வெளிப்பட வேண்டும்.

வறுமை வார்த்த தொழில் அதிபர்

இதேபோல் ஜப்பானைச் சேர்ந்தவர் கொனசுகே மட்சுசிதா. மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். 8 பேருடன் பிறந்த அவர் உடல் ஆரோக்கியம் குன்றியவராகவும் இருந்தார். அவருடன் பிறந்தவர்களில் ஐந்துபேர் பரிதாபமாக இறந்துபோனார்கள். குடும்பச்சூழல் காரணமாக மட்சுசிதா தனது ஒன்பதாவது வயதில் படிப்பை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து மரத்துண்டுகளை சேகரித்து விற்பனை செய்தார். பின்னர் இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் பணியாற்றினார். நாளடைவில் அங்கிருந்து வெளியேறி எலக்ட்ரீசியன் பணி மேற்கொண்டார். தனது ஓயாத உழைப்பின் காரணமாக தனது வீட்டிலேயே எலக்ட்ரிக் ஜாக்கெட்டை உருவாக்கினார். தனது மனைவிக்கு சொந்தமான பொருட்களை அடகு வைத்து இந்த தொழிலை அபிவிருத்தி செய்தார்.

பின்னாளில் சுமார் 30 மணி நேரம் செயல்படும் வகையிலான இருசக்கர வாகன விளக்கை கண்டுபிடித்தார். மட்சுசிதா என்ற பெயரில் இவர் நடத்தி வந்த எலக்ட்ரிக் தொழில் நிறுவனம் பின்னர் உலகளவில் புகழ்பெற்ற நிறுவனமாக வளர்ந்தது. ஆசியாவின் எடிசன் என்று அழைக்கப்பட்ட அவர் பானாசோனிக், நேஷனல் போன்ற நிறுவனங்களின் உற்பத்தியிலும், வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகித்தார்.

சார்லஸ் டிக்கன்ஸ் சிறந்த நாவலாசிரியர். தனது ஒன்பதாவது வயதில் பள்ளியில் சேர்ந்து ஒரு சில ஆண்டுகள் தான் பயின்றார். அவரது அப்பா கடன் தொல்லை காரணமாக சிறை செல்ல நேர்ந்ததால், குடும்ப பொறுப்பு அவரது தலையில் விழுந்ததே இதற்கு காரணம். இதனால் பாட்டில்களுக்கு லேபிள் ஒட்டும் வேலையைச் செய்தார்.

பின்னர் ஒரு வக்கீலிடம் குமாஸ்தாவாக சேர்ந்தார். ஆர்வம் காரணமாக தானாகவே சுருக்கெழுத்து பயின்றார். இது அவருக்கு நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பை பெற்றுத்தந்தது. அப்போது அவர் சந்தித்த மனிதர்களை கதாபாத்திரங்களாக சித்தரித்து நாவல் எழுதும் முயற்சியில் ஈடுபட்டார்.

தனது அதீத தன்னம்பிக்கையால் இருபத்து நான்காவது வயதில் துணிச்சலாக முடிவெடுத்து முழுநேர எழுத்தாளராக மாறினார். பின்னர் அவர் உலகப்புகழ்பெற்ற நாவலாசிரியராக புகழ்பெற்றார். இடர்பாடுகளையும், வறுமையையும் சவாலாக எடுத்துக் கொண்டு துணிச்சலாக செயல்பட்டதே அவரது இந்த வெற்றிக்கு காரணம். முதன்முதலில் பத்திரிகைகளில் தொடர்கதையை எழுதும் பழக்கத்தை அறிமுகம் செய்தவரும் இவர்தான். அவரது நாவல்கள் பெரியோர் முதல் சிறியோர் வரை இன்றும் விரும்பி வாசிக்கப்பட்டு வருகிறது.

துவண்டு விடாத மனமே துணை

பால் விட்ஜென்ஸ்டெய்ன் என்பவர் பியானோ வாசிப்பதில் ஆர்வம் உடையவர். முதல் உலகப்போரில் தனது வலது கையை இழந்தார். சாதாரணமாக ஒருவிரலில் காயம் ஏற்பட்டால் கூட இசைக்கருவியை கையாளுவது கடினம். ஆனால் அவர் வலது கையை இழந்த பின்பும் மனம் தளராமல், எஞ்சி உள்ள இடது கையால் எவ்வாறு இசைப்பது என்பதை கற்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

பிரபலமான பல்வேறு இசை அமைப்பாளர்களிடம் இதுதொடர்பாக கேட்டார். அப்போதைய பிரபல இசை அமைப்பாளரான ரோவெல் அவருக்கு உதவினார். அவர் இசை ஆர்வம் கொண்ட பால் விட்ஜென்ஸ்டெய்னுக்கு ஏற்றவாறு இசை அமைத்துக் கொடுத்தார். பின்னாட்களில் பிறர் தனது குறையை அறியா வண்ணம் இசைத்து கச்சேரிகளிலும் கலந்து கொண்டு பெரும் புகழ்பெற்றார் பால் விட்ஜென்ஸ்டெய்ன். இது அவரது மன உறுதியையும், சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலையும் நமக்கு உணர்த்துகிறது.

பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கின்ஸ் என்பவரும் பல சவால்களை எதிர்கொண்டவர்தான். பேசுவது, நடப்பது, சுவாசிப்பது என அனைத்திற்கும் அவர் எந்திரங்களின் உதவியையே நாடவேண்டிய அளவிற்கு உடல்திறன் குன்றி இருந்தார். இதை அவர் தனது சாதனைக்கு தடையாக ஒருபோதும் கருதியது இல்லை. அவரது அறிவியல் கொள்கைகள் இன்று விஞ்ஞான உலகில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

பிரபஞ்சத்தின் இயக்கம் குறித்து அவர் எழுதிய "காலத்தை பற்றிய வரலாறு'' என்ற நூல் மிகவும் பிரசித்திபெற்ற புத்தகம் ஆகும். பல்வேறு விருதுகளை பெற்ற அவர் கூறும்போது, "ஒவ்வொருவரும் எந்தச் சூழ்நிலையிலும் தங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதுவே வெற்றிப்பாதைக்கு அவர்களை அழைத்துச் செல்லும்'' என்கிறார்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் சூழ்நிலைகளையும், இடர்பாடுகளையும் குறை கூறுவதில்லை. தங்களது சுயமுயற்சியால் எவ்வாறு தடைகளை எதிர்கொள்வது என்ற சிந்தனையிலேயே செயல்படுவார்கள். தங்கள் மேல் நம்பிக்கை இல்லாதவர்களே வெவ்வேறு காரணங்களை கூறி தங்களது தோல்விக்கு நியாயம் கற்பிக்க முயல்வார்கள். ஆகவே இளைஞர்களே, எப்போதும் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள். சமாளிக்கும் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள். சாதனைகள் எல்லாமே உங்கள் தோள்களைத் தழுவி நிற்கும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Premium Blogger Templates | Best View (1024x768) on Mozilla Firefox and IE 7.0