Showing posts with label World. Show all posts
Showing posts with label World. Show all posts

சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு

ஜூன் 14 உலக மக்களால் என்று மறக்கபடாத மனித குலப்போராளி சே குவராவின் (Che Guvera) 80 வது பிறந்த தினமாகும் 1967 ம் ஆண்டில் பொலீவிய இராணுவத்தால் தைது செய்யபட்டு அதன் பின்னர் சுட்டுக்கொல்லப்பட இப்போராளியின் உடலம் கூடவெளியே தெரியாதபடி இரகசிய இடத்தில் எரியூட்டபட்டது. உலகின் நினைவிலிருந்து அவரை அகற்ற ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொண்ட அம்முயற்சி நிறைவேறவில்லை. இன்றும் அவரது நினைவுகளைஉலக மக்கள் மத்தியில் இருந்து அகலவில்லை. அம்மாவீரனின் பிறந்த நாளை முன்னிட்டு அப்போராளியின் நினைவுகளை முரசம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்குடன் செப்ரெம்பர் 2007 ல் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த சேகுவராவின் வாழ்க்கை பதிவுகள் கொண்ட கட்டுரையை இங்கு தருகின்றோம்.

உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு மனிதன் சுடப்பட்டு கீழே விழுவான். அவனை யார் எங்கிருந்து, எதற்காகச் சுட்டார்கள் என எதுவும் தெரியாது. ஆனால், அவனைச் சுட்ட துப்பாக்கியின் மிச்ச புகை, அமெரிக்காவில் கசியும். உலக வரைப்படத்தில் இந்த ஓநாயின் காலடி படாது இடமே இல்லை.

.“சே குவராவின் அமெரிக்கப் பயணமும், அமெரிக்க எதிர்ப்பு பேச்சும் சி.ஐ.ஏ வுக்கு சினமூட்டின. அதுவரை காஸ்ரோவை குறிவைத்து இயங்கிய சி.ஐ.ஏ தன் முழு எரிச்சலையும் சேகுவராவின் பக்கம் திருப்பியது. காஸ்ரோவைக் காட்டிலும் இவர் தான் ஆபத்தானவர் என இலக்கு தீர்மானிக்கப்பட்டது.

விழும் இடமெல்லாம் விதை போல விழுவதும், எழும் இடமெல்லாம் மலைபோல எழுவதுமாக இருந்த சே குவரா சதித்திட்டம் குறித்து அறிந்தும்....

புன்னகைத்தார். தோடர்ந்தும் சீனாவுக்கும் அவ்ஜீரியாவிற்குமாக தன் பயணங்களைத் தொடங்கினார். சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப்பேசினார். ரஷ்யாவையும் ஒரு பிடி பிடித்தார். அமெரிக்காவால் பாதிக்கபடுகின்ற மூன்றாம் உலக குட்டி நாடுகளுக்கு ரஷ்யா பொருளாதார ரீதியில் பாதுகாப்பளிக்க வேண்டியது அதன் தார்மீகக் கடமை என முழங்கினார்.

தொடர்ந்து தான்சானியா கானா, கொங்கோ போன்ற ஆபிரிக்க நாடுகளுக்கும் பயணம் தொடர்ந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் அடக்குமுறை சர்வாதிகாரத்தாலும் ஆபிரிக்க மக்கள் அவதிப்படுவதை நேரடியாக உணர்ந்தார். குறிப்பாக கொங்கோவின் அரசியல் சூழல், அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

மூன்று மாத கியூபா அரசால் அங்கீகரிக்கப்படாத பயணத்திற்கு பிறகு சே குவரா 1965 மார்ச்சில் கியூபா திரும்பினார். விமான நிலையத்தில் அவரை பிடல் காஷ்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான வெளியுலகுக்கு சே குவரா நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு. அதன் பிறகு சேகுவராவைக் காணவில்லை. எங்கே போனார் என யாருக்கும் தெரியவில்லை.

அன்றிரவு ஒரு சந்திப்பில், காஸ்ரோவின் தம்பி ரால் காஸ்ரோ சே குவராவை டிராஸ்கியிஸ்ட் என சுடு சொல்லால் அழைத்ததாகவும், அது சே குவராவின் மனதை மிகவும் காயப்படுத்தியதாகவும் அதுதான செகுவராவை கியூபாவை விட்டு வெளியே செல்லக் காரணம் என்றும் சொல்லப்படுவதுண்டு.

சே குவரா எங்கே? பத்திரிகைகள் அலறின. அனைவரது பார்வையும் காஸ்ரோவின் பக்கம் திரும்பியது. சேகுவராவை சுட்டுக்கொன்று விட்டார் காஸ்ரோ எனமளவு கோபம் கிளம்பியது. காஸ்ரோவின் மௌனம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.

சே குவரா காஸ்ரோ இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியது உண்மை. அடிப்படையில் சேகுவரா ஒரு யதார்த்தவாதி. உள்ளது உள்ளபடியே போட்டு உடைக்கின்ற செயற்புயல். காஸ்ரோ ஒரு ராஜதந்திரி. அரசியல்பூர்வமாகக் காய்களை நகர்த்துபவர். “யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது சே குவராவின் உலகம். ஆனால், கியூபாவையும் அதன் மக்களையும் காப்பாற்றவேண்டிய பொறுப்பு காஸ்டோவிற்கு. இருவருக்குமிடையிலான முரண்கள் அனைத்துக்கும் இந்த வேறுபாடுகளே அடிப்படை.

உண்மையில் சே குவரா அப்போது காஸ்ரோவுக்கும், அவரது தாய்க்கும் ஒரு கடிதத்தை எழுதி அனுப்பிவிட்டு தனது அடுத்த புரட்சிக்காக கொங்கோ கிளம்பி இருந்தார். காஸ்ரோ எவ்வளவோ முயற்சித்தும் சே குவராவை நிறுத்த முடியவில்லை. “மக்களுக்கான் பணியில் தனது பாதை தொடர்ந்து நீளும். அதனை ஒருபோதும் தடுக்கக் கூடாது” என சே குவரா காஸ்ரோவிடம் உறுதிமொழி வாங்கியிருந்ததும் அதற்கு ஒரு காரணம்.சேகுவரா எங்கே? எனக் கேட்ட யாருக்கும் காஸ்ரோவால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியவில்லை. காரணம், சி.ஐ.ஏ!

சே குவராவை அழித்தொழிக்கத் தேடிவரும் சி.ஐ.ஏ விற்கு துப்பு கிடைத்துவிடும் என காஸ்ரோ அஞ்சியதே காரணம். வியட்நாமுக்கு சே குவரா சென்றுவிட்டதாக சொன்னதை நம்பி, வியட்நாம் காடுகளில் சே குவராவை சி.ஐ.ஏ தேடி அலைந்து ஏமாற்றமும் எரிச்சலும் அடைந்தது. அந்தக் கடுப்பில் சே குவராவை காஸ்ரோ சுட்டுக்கொன்றதற்கு தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாகப் பொய்ச் செய்தியைப் பரப்பத்தொடங்கியது. இது காஸ்ரோவிற்கு மிக நெருக்கடியை உருவாக்க அக்டோபர், 03, 1965 ல் பொதுமக்கள் முன்னிலையில் சே குவரா தனக்கு எழுதிய கடிதத்தை அவரது அனுமதியுடன் சே குவரா கியூபாவை விட்டு தான் வெளியேறியதற்கான காரணத்த்தையும் கொங்கோ புரட்சிக்குச் செல்வதையும் குறிப்பிட்டிருந்தார்.

சே குவரா கொங்கோ காடுகளில் துப்பாக்கியுடன் களத்தில் இருந்தார். கியூபா வீர்ர்கள் மற்றும் கறுப்பினப் போராளிகளுடன் கொங்கோவின் சர்வாதிகார அரசை வேரறுக்கும் பணியில் இறங்கியிருந்தார். ஆனால் அவர் நினைத்தது போல் அந்த புரட்சி சே குவராவிற்கு வெற்றி தேடித் தரவில்லை. கொங்கோ நாட்குறிப்புக்கள் எனும் டைரியில் எழுதியிருந்தது போல, அது ஒரு தோல்வியின் வரலாறாக முடிந்தது.

அமெரிக்க சி.ஐ.ஏ கழுகுகள் அவரைத் தேடி கொங்கோ காடுகளுக்குள் புகுந்த போது சே குவரா தனது பட்டாளத்துடன் செக்கோஸ்லாவியாவுக்கு இடம் பெயர்ந்திருந்தார்.
சே குவராவிற்கு மீண்டும் கியூபா செல்ல விருப்பம் இல்லை. பொலீவிய மாவேயிஸ்ட் தலைவரான மோஞ்சேவின் அழைப்பின் பேரில் தன் அடுத்த இலக்கான் பொலிவீயாவுக்குள் 1966 இறுதிவாக்கில் மாறுவேடத்தில் நுழைந்தார். அவருடன் 50 பேர் கொண்ட கெரில்லாப்படையும் புனிதப் பணியில் ஈடுபட்டது. அவருக்கு கொங்கோவைப் போல தோல்வியே காத்ததிருந்தது.

தட்ப வெப்ப சூழ்நிலைகளின் முரண், கலாச்சாரப் புரிதலின்மை, போன்றவை\யே அவரது திட்டங்களின் தோல்விகளுக்கு காரணம். இன்னொரு பக்கம் அவர் யார் யாரை தனது அரசியல் நண்பர்களாக நம்பி இருந்தாரோ, அவர்கள் யாரும் உதவி செய்யாமல், மௌனமாக கைகட்டி வேடிக்கை பார்த்ததும் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று. இந்த மனவேதனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து சே குவராவை வாட்டி வதைத்தது. போதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உணவின்மை போன்ற பிரச்சனைகளுடன் சே குவரா காடுகளில் அலைந்தார். சி.ஐ.ஏ பொலிவியாவுக்குள்ளும் புகுந்தது. பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் என்பவர் தலைமையில் வேட்டையாடத் தொடங்கியது.

1967 அக்டோபர் 8 தென் அமெரிக்கச் சரித்திரத்திலேயே ஓர் இருண்ட தினம்.

காலை 10.30

யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் சே குவரா கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடுமேய்க்கும் குண்டுப்பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.

நண்பகல் 1.30..

அந்தக் குண்டுப் பெண் பொலீவிய ராணுவத்திற்கு சே குவராவின் இருப்பிடத்தைக காட்டிக் கொடுக்கிறாள். அலறிப் புடைத்துப் பறந்த வந்த பொலீவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சராமாரியாகச் சுடத்தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கிகளால் சுடுகின்றனர்.

பிற்பகல் 3.30

காலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலீவிய இராணுவத்திடம் நான்தான் சே குவரா இறப்பதைக் காட்டிலும் உயிருடம் பிடிபடுவது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றார். மாலை 5.30 அருகிலிருந்த லா ஹிகுவேராவிற்கு வீரர்கள் கைத்தாங்கலாக சேகுவராவை அழைத்துவருகின்றார்கள்.

அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் சே குவரா கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார். இரவு 7.00 மணி சே குவரா பிடிபட்டார் என சி.ஐ.ஏ வுக்கு தகவல் பறக்கிறது. அதே சமயம் சே குவரா உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாக பொய்யான தகவல் பொலீவிய இராணுவத்தால் பரப்பப்படுகிறது.

தனக்கு உணவு வழங்கி வந்த பள்ளி ஆசியியையிடம் “ இது என்ன இடம்” என்று சே குவரா கேட்கிறார். பள்ளிக்கூடம் என்று அந்தப்பெண் கூற “பள்ளிக்கூடமா? ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது? என வருத்தப்படுகின்றார். சாவின் விளிம்பிலும் சேகுவராவின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.

அக்ரோபர் 9 அதிகாலை 6.00 மணி.

லாஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகப்ரர் வட்டமடித்து வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும கமராக்களுடன் பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ உளவாளி இறங்குகிறார்.

"கோழையோ நீ சுடுவது சே குவராவை அல்ல! ஒரு சாதாரண மனிதனைத்தான்" -  சே குவராவின் இறுதி வசனம்

கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுக்கடைந்த ஆடைகளுடன் சே குவராவைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்டிருப்பது சே குவராதான் என அமெரிக்காவிற்கு தகவல் பறக்கிறது. சே குவராவின் டைரிகள் மற்றும் உடமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கமராவில் சேகுவராவை பல கோணங்களில் புகைப்படங்கள் எடுக்கிறார் பெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போல காட்சி தரும் சே குவராவின் அப்புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.

காலை 10.00

சே குவராவை உயிருடன் வைத்து விசாரணைகள் நடத்தினால் அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத்தன்மையும் உருவாக்கி விடும் என்பதால் அவரை உடனடியாக தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏ விடம் இருந்து தகவல் வருகிறது.

வாலேகிராண்டாவில் இருந்து வந்த அத்தகவல் 500,600 எனக் குறிச்சொற்கள் தாங்கி வருகிறது. 500 என்றால் சே குவரா 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள்.

காலை 11.00 மணி

சே குவராவை சுட்டுக்கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. “மரியோ ஜேமி” என்ற பொலீவிய இராணுவ சார்ஜன் அக்காரியத்திற்காக பணியமர்த்தப்படுகிறார்.

ஆதனியிடத்திற்கு மரியோ அழைத்துச் செல்கிறார். “முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்” என்பார் சேகுவரா. ஆனால் மரியோ அவரை ஒரு கோழையைப்போல் கொல்லத் தயாராகிறார். தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு சேகுவரா கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார்.

கோழையே சுடு! நீ சுடுவது சே குவராவை அல்ல: ஒரு சாதாரண மனிதனைத்தான்!

இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வசனம் இதுதான்!

1967, அக்ரோபர், 9 மணி நண்பகல் 1.10

மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஆறு தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி,தேசம் என எல்லைகளை கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.

சே குவரா இறந்த தகவல் உலகத்தை உலுக்கியது. அக்ரோபர் 18... கியூபா.. ஹவானாவில் வரலாறு காணாத கூட்டம் சே குவராவின் அஞ்சலிக்காக காஸ்ரோவின் தலைமையில் கூடியிருந்த்தது. அவர்கள் முன் தலைமை உரையாற்றுகிறார் காஸ்ரோ. “வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்று விட்ட சே குவரா நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூப மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாக கொண்டு செயற்பட வேண்டும். என வேண்டுகோள் விடுக்கிறார்.

இறந்தபோது சே குவராவிற்கு வயது 40. உலகம் முழுக்க சேகுவராவின் புகழ் இன்னும் அதிகமாக பரவியது. உலகின் அனைத்து இதழ்களிலும் சே குவரா குறித்துக் கட்டுரைகள் எழுதப்பட்டன. உலகின் பெரும் கவிகளான ஆக்டோவியா பாஸ், ஹூலியா கொத்சார் போன்றவர்கள் சே குவரா குறித்து கவிதைகள் எழுதினர். பிரெஞ்சு அறிஞர் ழான் போல் சார்த்தர், பூமியில் வந்து போன முழுமையான மாமனிதர் சே குவரா என மகுடம் சூட்டினார்.

நிகரகுவாவில் புரட்சி ஏற்பட்டு குவோராயிசம் எனும் கொள்கை கொண்ட சான்டனி ஸ்டாஸ் அரசு, ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் வெற்றி ஊர்வலத்தில் ஏசுவைப் போன்ற சே குவராவின் உருவம் கொண்ட அட்டைகளை அனைவரும் தாங்கிப் பிடித்திருந்தனர்.

கியூப அரசாங்கம் சே குவராவின் நினைவை தொடர்ந்து சமூகத்தின் ஞாபகத்தில் பதியவைக்கும் விதமாக தனது கட்டங்கள் மற்றும் பூங்காக்களில் சித்திரங்களாகவும், சிலைகளாகவும், பல்வேறு உருவ வேலைப்பாடுகளாகவும் நிர்மாணித்து பெருமைப்படுத்தியது. சான்டோ கிளாரா எனும் நகரில் சேகுவராவின் மியூசியம் ஒன்றும் உள்ளது. வருடந்தோறும் மில்லியன் கணக்கில் பயணிகள் வெளிநாடுகளிலிருந்து இந்த மியூசியத்தைப் பார்ப்பதற்காக மட்டுமே கியூபாவிற்கு செல்கின்றனர். கியூபாவில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலைகளில் வகுப்பறைக்கு செல்ல முன், அத்தனை குழந்தைகளும் ஒருமித்த வாசகம் என்ன தெரியுமா?

“ஆம் எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்டுகளாக இருந்தனர். நாங்கள் சே குவராவைப் போல இருப்போம்!”

நன்றி: ஆனந்த விகடன்

ஆர்டிக் துருவ மிதக்கும் பனி பாறைகள் - A Titanic Journey!!

'Titanic' இங்கிலீஷ் படம் எல்லாரும் பார்த்திருப்பீங்க! நம்ம ஊரு காதலை போல ஒரு அருமையான காதல் கதையோட பின்னோட்டத்தில 1912ம் வருஷம் இங்கிலாந்திலந்திலருந்து அமெரிக்கா வந்த கப்பல் பனி பாறையில மோதி, கப்பல் மூணா உடைஞ்சு, அந்த ஆழ்கடலில் மூழ்கிபோனதை அழகா படம்புடிச்சு வந்த ஒரு ஹாலிவுட் படம்! ஞாபகமிருக்கா! அந்த படத்தோட கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தை காப்பி அடிச்சு நம்ம ஷங்கர் இந்தியன் படத்தில அந்த அண்ணா சாலை டிராபிக் ஜாம் எடுத்திருந்தாருல்ல. டைட்டானிக் படத்தில எந்த காட்சின்னு தானே கேட்கிறீங்க! அதான் முதன் முதல்ல பயணிகள் எல்லாம் கப்பல்ல ஏறும் காட்சிகள், அந்த கிராஃபிக்ஸ் கலக்கலோட எடுத்தது தான். அதுக்குன்னு உபயோகிச்ச கம்பூட்டர் தொழில்நுட்பத்தை நம்ம கணனி தொழில்நுட்ப வல்லுநர்கள்கிட்ட கேட்டீங்கன்னா அப்படியே உருகி அந்த 'VAX' கம்ப்யூட்டரை பத்தி நிறைய சொல்வாங்க! நான் கேட்டுறுக்கேன். இப்ப அந்த கதை எதுக்கு, இந்த மிதக்கும் பனிப்பாறைகள்(Iceberg)பத்தியும், அது எங்க, எப்படி கடல் பயணத்துக்கு பயங்கரத்தை விளைவிக்கும்ங்கிறதை பத்தி கொஞ்சம் பார்ப்போமா!

மொத்தமா உலகம்னு எடுத்துக்கிட்டிங்கன்னா, எத்தனை கண்டம் இருக்கு தெரியுமா, எல்லாரும் தப்பா அஞ்சு தான் இருக்கும்பாங்க, அது ஆசியா, ஆஸ்திரேலையா, ஐரோப்பியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கான்னு. ஆனா நம்ம கதை கேட்ட மாதிரி, ஏழு கண்டம் ஏழுகடல்னு மொத்தம் ஏழு இருக்கு! வட துருவத்தில இருக்கிற ஆர்டிக் கண்டமும், தென் துருவத்திலே இருக்கிற அண்டார்ட்டிக்கா கண்டமும் தான் அந்த மிச்சம் இரண்டு! அதில ஆர்டிக் கண்டம் நீராலும் அண்டார்ட்டிக்கா கண்டம் நிலத்தாலும் உருவாக்கப்பட்டது தெரியுமா! மனுசன் உலகம் பூரா போயி குடியேறி, வாழ்ந்தது, வாழ்ந்துகிட்டு இருக்கிறது இந்த அஞ்சு கண்டத்திலே, ஆனா அந்த துருவக் கண்டங்கள் மனிதன் போய் வாழ தகுதியற்ற நிலையில் உள்ளது. ஏன்னா அந்த ரெண்டுமே கடுங்குளிர் பிரதேசம். எப்பவும் தட்பவெப்பநிலை -50oC மேலே! ஆனா அதிலேயும் மனுசன் போய் போடற ஆட்டம் இப்ப இருக்கே அது தனி! ஏன்னு கேளுங்க!

ஆர்டிக் துருவம் மொத்தமுமே கனடா நாட்ல இருக்குது. ஆனா இந்த அண்டார்ட்ட்டிக்கா இருக்கே அதுல தனி நாடுகள்னு எதுவும் இல்லை. ஆனா உலகத்திலே இருக்கிற அத்தனை வளர்ந்த நாடுகளும் அங்க அங்க இடம் பிடிச்சு, இது என்னுதுன்னு உன்னுதுன்னு எல்லை கோடு போட்டு வச்சிருக்காங்க தெரியுமா உங்களுக்கு! ஏன் நம்ம இந்தியா கூட அங்க ஒரு பகுதியை பிடிச்சு நிலத்தடி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கு! அது மாதிரி பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான்னு அத்தனை வளர்ந்து நாடுகளும் அங்க இடம் போட்டு வச்சிருக்கு. அமெரிக்கா சரியா துருவத்தின் மையத்திலே இடம் பிடிச்சி வச்சிருக்கு, அங்கே கரக்டா பூமத்திய ரேகையின் ( Longitudinal and Latitudinal Crossing) 0o ல அவெங்க கொடி நட்டு வச்சிருக்காங்கன்னா பார்த்துக்கங்க. அதாவது தென் துருவம மையத்தில்!

(இங்க குளிர்காலத்தில, காத்தும், புயலும் வந்தா சீதோஷணம் -80oC லருந்து -90oC வரை போயிடும், இந்த டெம்ரேட்சர்ல மனுஷன் எவ்வளவு நேரம் தாக்குபிடிப்பான்னு தெரியுமா, சரியா நாலு நிமிஷம், அவ்வளவு தான் மண்டையை போட்டுறுவான்!) இது அத்தனைக்கு காரணம், அத்தனை கனிமவளமங்கள் நிறைந்த கண்டம் அது! உலகத்திலே மத்த பகுதியிலே இருக்கிற கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு அளவில(கண்டுபிடிக்கபட்ட வரையில்!) நாலு பங்கு அதிக வளங்கள் கொண்டது இந்த அண்டார்ட்டிக்கா, அதான் பிரச்சனையே! அதனால தான் எல்லா நாடுகளும் நான் நீன்னு அடிதடி போட்டுகிட்டிருக்காங்க!. என்னா ஒரு சிரமம், அவ்வளவு குளிரையும் தாங்கி அந்த கனிம வளங்களை எடுக்கிறத்துக்கான தொழில்நுட்ப வளர்ச்சி இன்னும் வரலை, வந்தா இனி அண்டார்ட்டிக்காவுலயம் போர், படைன்னு செய்தி வரக்கூடிய நாள் அதிக தூரமில்லை! இன்னொரு விஷயம் தெரியமா, இந்த அண்டார்டிக்காவிலேயிருந்து பிச்சிக்கிட்டு வந்த தேசங்கள்ல ஒன்னு தான் நம்ம இந்தியா ( நம்மூருல லெமூரியா கண்ட கதை, முன்தோன்றிய மூத்தகுடின்னு கதைவிட்டுட்டு திரிவாங்கல்ல, அத நிஜமா என்னான்னு தெரிஞ்சுக்கணுன்னா கொஞ்சம் சயிண்டிபிக்கா, இந்த நிலம் நீர் பரப்போட உருவாக்கம்(Evolution) பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே எப்படி தோன்றிச்சின்னு தெரிஞ்சிக்க ஆசைப்பட்டீங்கன்னா, இணையத்திலே நிறைய தகவல் நிலையங்கள் இருக்கு போய், வேணும்னா பாருங்க!)

சரி நம்ம தலைப்பில எடுத்துக்கிட்ட பனிபாறைகளை பத்தி பேசுவோம் இனி, இந்த பனிபாறைகள் அதிகம் மிதக்கும் இடம் இந்த வடதுருவ ஆர்டிக் கண்ட பகுதி! முதல்ல இந்த பனிபாறைன்னா என்னா, எங்கிருந்து வந்துச்சு, அது எடை, வயசு என்னான்னு பார்ப்போமா! இந்த பனிபாறைகள் அதிகமா இருப்பது இந்த வட அட்லாண்டிக் சமுத்திரத்தில! இது அனைத்தும் உருவாவது நகரும் பனிமலைகள்(Glaciers)லாள, கிரீன்லேண்ட்ன்னு ஒரு நாடு இருக்கு பாருங்க, அதாவது வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் அந்த பனிமலைகள் மிகுந்த நாட்ல இருந்து இந்த நகரும் பனிமலைகள் அப்படியே கடல்ல விழுந்து சின்ன சின்ன பனிபாறைகளா(Iceberg) நகர்ந்து கொண்டிருக்கிருக்கின்றன! இந்த மாதிரி நகரும் மலைகள் ஒரு 100க்கும் மேலே அங்க இருக்கு, சில பனிபாறைகள் கனடா நாட்டின் வடக்கு பகுதியான சிறு சிறு தீவுகள் அடங்கிய பகுதிகள்லருந்தும் விழும் நகரும் பனிமலைகளாகும். இப்படி மிதக்கும் பனிபாறைகள் அந்த பகுதியில சின்னதும் பெருசுமா சுமார் ஒரு 40000 மிதந்துகிட்டு இருக்கு. இது அந்த குளிர்காலத்தில இருந்து வசந்தகாலம் வரும்போது கொஞ்ச கொஞ்சமா அந்த சமுத்திர அலையால தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும். சில பனிபாறையோட அளவு 13 சதுரமைல் பரப்பளவுக்கு இருக்கும், அதாவது அதில ஒரு பெரிய நகரத்தையே நிர்மானிக்கலாம்! இந்த பனிபாறைகள் உருகி நீராவதுக்கு ஒரு வருஷம் பிடிக்கும், அதாவது இதோட வயசு, ஒரு வருஷத்திலே இருந்து ஒன்னரை வருஷம் வரை! ஆனா இந்த பனிபாறைகள் உருவாக காரணமா இருக்கும் அந்த நகரும் பனிமலைகள்(Glaciers) உண்டாக்கபட்ட பனிகட்டிகள் 15000 வருஷத்துக்கும் மேலேன்னா நம்ப முடியுமா உங்களுக்கு!

சரி இதோட கடல்ல நகரும் வேகம் என்னான்னு தெரியுமா, சுமார் 0.7km/h, அதாவது கிட்டதிட்ட ஒரு கி.மீ. ஒரு மணி நேரத்துக்கு! சில சமயம் அடிக்கும் காத்து மற்றும் கடல் அலைகளா இது மணிக்கு 3.6 கி.மீ வேகத்திலக் கூட இது மிதந்துக்கிட்டே நகரும். இது ஏன் மிதக்குது அப்படின்னா, இந்த பனிபாறைகள் அடர்த்தி (density) இருக்கே அது உப்புகடல் தண்ணியை விட கம்மி, அதாவது பனிபாறை அடர்த்தி கிட்ட திட்ட 900 kg per cubic meter இருக்கும், ஆனா கடல் தண்ணி அடர்த்தி 1025 kg per cubic meter இருக்கும். அதனால இந்த மொத்த பாறையில எட்டுல ஏழுபங்கு தண்ணிக்கு கீழேயும் மீதி ஒரு பங்கு தண்ணிக்கு மேலயும் இருக்கும். அதைத்தான் ஆங்கிலத்தில "tip of the iceberg" ன்னு சொல்வாங்க!
இந்த மாதிரி மிதக்கிற பனிபாறைகள் வடக்கிலருந்து தெற்கா ஒரு 4000 கி.மீ வரை நகர்ந்து போகும், அதாவது கனடா நாட்டில் 'Baffin Bay'ங்கிற இடத்தில இருந்து St. John's ங்கிற ஊருக்கு தெக்காலே ஒரு 800 கி.மீ நகர்ந்து போகுது. இதை சிலசமயம் கிழக்காலே அயர்லேந்து பக்குமும் தெக்காலே கரிபியன் தீவுகள்ல பெர்முடா பக்கமும் பார்க்கலாம்!

சரி இப்படி கடல்ல வந்து விழுற பனிபாறைகள், சனியன் விழுந்தது, அதுகிடக்கு, அதில என்ன இவவளவு வந்து கிடக்குங்கிறீங்களா! ஆமா இப்ப நீங்க ஆகாய மார்க்கமா எங்க வேணும்னாலும் போயிடுறீங்க. ஒரு 100 வருஷம் முன்னாடி நினைச்சு பாருங்க. எல்லாமே கடல் மார்க்கம் தான். அப்படி கப்பல் பிரயாணம் போறவங்க இந்த மிதக்கும் பனிபாறைகள்ல மோதி கப்பல் மூழ்கி செத்தது நிறைய! ஏன் இப்பக்கூட, இந்த தொழில்நுட்பம் வளர்ந்த நிலையிலும் இதோட விளைவுகள் பயங்கரம் எப்படின்னு கேட்கிறீங்களா?

இந்த சின்னதும் பெரிசுமா மிதக்கும் இந்த பனிபாறைகள் அவ்வளவு ஈஸியா இந்த ரடார் ஸ்கிரீனுக்கு சிக்காது. அதுனால ஓட்டிக்கிட்டு போற கப்பலை திடீர்னு நிறுத்தமுடியாது! இதில நம்ம சினிமா பார்த்த டைட்டானிக் கப்பல் மட்டுமில்ல, அந்த பகுதியில, இந்த மாதிரி பனிபாறைகள்ல மோதி முழுகுன கப்பல்கள் ஏராளம்! 1841லேயே 'William Brown'ங்கிற கப்பல் இந்த பனிபாறையிலே மோதி ஒரு 64 பேரு செத்து போனாங்க, ஆனா டைட்டானிக்கல இறந்தவங்க 1500 பேரு! 1909ல 'Geisha'ங்கிற இன்னொரு கப்பலு கேரம்போட்ல நாலு சுவத்தில அடிச்சு சிவப்பு காய் போயி குழியில விழும் பாருங்க, அது மாதிரி வழிநெடுக இருந்த ஒவ்வொரு பனிபாறையிலயும் மோதி கடைசியில மூழ்கி கடலுக்கு கீழே போச்சு, நல்ல வேளையா அதுல பயணம் செஞ்சவங்க தப்பிச்சோம் பொழச்சோமுன்னு St. John's ங்கிற ஊருக்குவந்து சேர்ந்தாங்க! இப்படி சொல்லிக்கிட்டே போகலாம், இது மாதிரி ஒரு 240 Collisions (பனிபாறை மோதல்கள்). இதை கனடா நாட்ல இருக்கிற 'The Institute of Ocean Technology (IOT)' ங்கிற நிறுவனம் செய்திகளை சேகரிச்சு வச்சிருக்கு. அதுமட்டுமில்லம, இந்த பனிமலை மோதல்கள், ஆழ்கடல் கொந்தளிப்புகள் எல்லாத்துக்கும் கப்பல்கள், நடுகடலில் மிதக்கும் எண்ணெய் மேடைகள் (Oil Platforms and Rigs) எல்லாம் எப்படி ஈடு கொடுத்து தாக்குபிடிக்கணும், அதுக்கு தகுந்தமாதிரி இந்த கப்பல் மற்றும் மேடைகள் கட்டுமான தொழில்நுட்பத்துக்கு உதவ ஆராய்ச்சிகளும் செஞ்சுக்கிட்டு இருக்கு!

இதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு, இந்த ஆர்டிக் பகுதியும் அன்டார்ட்டிக்கா மாதிரி கனிம வளங்கள் நிறைந்த பகுதி! எண்ணெய் வளமும் அதிகம். ஆனா கடுமையான குளிர் மற்றும் இந்த பனி பாறைகள் மோதல்கள்லாள ஆபத்துகளும் இருப்பதால அதை எப்படி பாதுகாப்பாக அந்த வளங்களை எடுக்கலாமுன்னு இப்போ முனைப்பா இருக்காங்க, அது ஓன்னு. இன்னொன்னு, இந்த 'வடக்கு ஆர்டிக் கடல்வழி தடம்'. அதாவது ஐரோப்பாவிலருந்து ஆசியா போகவும், வட அமெரிக்க கிழக்கு பகுதியிலருந்து மேற்கு பகுதி செல்லவும் இந்த கடல் மார்க்கம் ரொம்ப வசதி ஏற்கனவே அமெரிக்க கிழக்கு பகுதியிலருந்து மேற்கு பகுதி செல்ல பனமா கால்வாய் இருக்குல்ல, (இது எப்படி வந்தது என்னான்னு யாருக்கும் விருப்பம் இருந்தா சொல்லுங்க, இன்னொரு தனி பதிவு இந்த பனமா கால்வாய் பத்தி எழுதுறேன்!) அது மாதிரி இந்த வடக்கு பனமா கால்வாய் திட்டம் ரொம்ப நாளா இருக்கு. இந்த மார்க்கமா ஒரு 300 வருஷத்துக்கு முன்னமே கடல்வழி பயணம் போறேன்னு பனிகடல்ல சொருகி செத்த கதைகள் நிறைய இருக்கு! மாறி வரும் தட்ப வெப்ப நிலையால, ஆர்டிக் பனி உருகி, இப்போ அத்தடங்கள், பிராயாணம் செல்ல ஏதுவா இருக்கு! ஆக அந்த மார்க்க பிரயாணத்துக்காகவும் தான், இந்த IOT நிறுவனம் அனைத்து ஆராய்ச்சிகள்லயும், இந்த பனிபாறைகள் பற்றி செஞ்சுக்கிட்டு இருக்காங்க!

எவ்வளவு திரில்லாங்கா இருக்கில்ல! இந்த பனிபாறைகளை பார்க்க, இப்போ சுற்றுலா மாதிரி அழைத்து செல்லவும் நிறைய நிறுவனங்கள் இருக்கு. அதுக்கு நீங்க மொதல்ல கனடா போகனும், அதுவும் St. John's ங்கிற ஊருக்கு போன நீங்க போய் இதை அப்படியே பார்க்கலாம்! இந்த மிதக்கும் பனிபாறைகளை பார்க்கலாம். எத்தனை நாள்தான் நீங்க கந்தக பூமியிலேயே இருப்பீங்க, போய் துருவப் பிரதேசம் பார்த்துட்டு வாங்க! 
Source: - ukumar.blogspot.com

டயானா - சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியத்தின் இளவரசி

உலகின் அத்தனை இதயங்களையும் ஒரு சேர கவர்வதற்கு அதிர்ஷ்டம் மட்டுமல்ல.. சில அடிப்படை தகுதிகளும் வேண்டும். இங்கிலாந்தின் இளவரசி டயானாவுக்கு அந்தத் தகுதி நிறையவே இருந்தது. அதிலும் மறைந்து 9 வருடங்கள் முடிந்த நிலையிலும், இன்னும் பலர் அந்த மரணத்தை மறக்கவோ, நம்பவோ முடியாமல் பெண்ணே.. எழுந்து வரமாட்டாயா?’, என்று கண்ணீர் விடும் பூங்கொத்துகளோடு உலகம் முழுக்க அவர் நினைவுநாளில் உருக்கமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டம் இது! பார்த்தவுடனே பளிச்சென்று மனசை அள்ளும் அந்தக் கனிவான சிரிப்பு.. இளவரசியே ஆனாலும் இவ நம்ம வீட்டுப் பொண்ணுஎன்று சொல்லும்படியான அந்த அன்னியோன்யம்... பந்தாக்களை விரும்பாத எளிமை என்று, டயானா மக்களுக்கு அறிமுகமான நாளிலிருந்தே அவர்களின் செல்லப் பெண்ணாகிவிட்டார்.

டயானா என்ற நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த, மென்மை சுபாவம் கொண்ட, அந்த அழகான இளம் பெண் மக்களுக்கு அறிமுகமானதே ஒரு சுவாரஸ்யமான கதை...

லண்டனில் இருந்த ஒரு நர்சரி பள்ளிக்கூடம் அது..வெளியே இருந்து வந்த இரைச்சலான குரல்கள் கேட்டு அந்தப் பள்ளியின் பிரின்சிபால் திகைத்துப் போய் வெளியே வந்தார்.வெளியே...பள்ளியை ஃபோகஸ் பண்ணியபடி கேமராக்கள்.. கேமிராக்கள்... கேமிராக்கள். ரிப்போர்ட்டர்கள், டி.வி. மைக்குகள் என்று சுற்றிலும் ஜே ஜேவென பெரும் இரைச்சல்!‘‘என்ன வேண்டும் உங்களுக்கு?’’ கேட்டார் அந்த பிரின்ஸிபால்.‘‘உங்கள் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கும் இளம் பெண்ணான டயானாவைப் பார்க்க வந்திருக்கிறோம். 

அவரை தயவு செய்து வெளியே வரச் சொல்லுங்கள்..’’ கோரஸாக குரல் வந்தது. பிரின்ஸிபால் திகைப்புடனே நிற்க...‘‘இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசியாக டயானா ஆகவிருக்கிறார் என்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமா, தெரியாதா? இந்த இளம் பெண் டயானாவும், இளவரசர் சார்லஸ§ம் காதலிக்கிறார்கள். 

டயானா எப்படியிருப்பார்? அவர் முகத்தை நாங்களும் பார்க்க வேண்டும்.. படமெடுக்க வேண்டும்.. அவரை வெளியே வரச் சொல்லுங்கள்!’’என்று கூட்டம் திமிற...ஒரு சிறிய குழந்தையைக் கையில் தூக்கி வைத்தபடி உள்ளே, கதவருகே, நின்று கேட்டுக் கொண்டிருந்த டயானா மிஸ்தயக்கத்துடன் வெளியே வந்தாள்.

தயக்கமான பந்தா இல்லாத பார்வை, மிக எளிமையான ஒரு மெல்லிய ஸ்கர்ட் என்று பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் டயானா வர..அவ்வளவுதான்... அத்தனை காமெராக்களும் தங்கள் ஆசை தீர டயானாவின் உருவத்தை விழுங்கிக் கொண்டன. 

அவளைப் பெருமிதத்துடன் ‘‘இவள்தான் எங்கள் இளவரசி!’’ என்று உலகம் முழுக்க அறிமுகப்படுத்தின. அன்று தொடங்கிய காமெராக்கள்தான்.. அப்புறம் டயானாவின் வாழ்க்கையில் அவரைத் துரத்தித் துரத்தி படமெடுக்கத் தொடங்கின. கடைசியில் கூட காமெராவுக்கு பயந்தேதான் அந்த அழகான இளம் பெண்ணின் வாழ்க்கையே ஒரு முடிவுக்கு வந்ததும் நடந்தது. டயானா சார்லஸ் காதல் ஆரம்பமானது ஒரு விழாவில்தான்!

எலிஸபெத் மகாராணியின் செகரட்டரியைத்தான் டயானாவின் இரண்டாவது அக்கா ஜேன் திருமணம் செய்து கொண்டிருந்தார். அக்காவைப் பார்க்கச் சொல்லும் டயானா அவ்வப்போது அரண்மனை விழாக்களிலும் பங்கு கொள்வதுண்டு. தவிர டயனாவின் அப்பா அல்டாஃப், இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் குதிரை பராமரிப்பு வீரராக இருந்ததால் அரச குடும்பத்துடன் நெருங்கிப் பழகுவார்.

எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருக்கும் இந்த இனிமையான இளம்பெண்ணை, இளவரசர் சார்லஸ் பார்த்தது அப்படி ஒரு விழாவில்தான். தனது திருமணத்தை ரொம்ப நாட்களாகத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த சார்லஸை முதல் பார்வையிலேயே கவர்ந்து விட்டாள் டயானா. இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கினார்கள். ஒன்று மாற்றி மற்றொன்று என இளம் பெண்கள், பல ஆண்களோடு டேட்டிங் போவது வெளிநாட்டில் சகஜமாக இருந்தாலும், டயானா அந்த மாதிரி எந்த ஆணுடனும் பழகியதில்லை. 

அவள் வாழ்க்கையில் முதன்முதலாக டேட்டிங் செய்ததே சார்லஸோடுதான்! டயானாவின் அழகு, நடத்தை, மகன் சார்லஸின் பிடிவாதம் என்று பல காரணங்களுக்காக மகாராணி எலிஸபெத்தும் இந்தத் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் நடந்த முதல் காதல் திருமணமே சார்லஸ் _ டயானாவுடையதுதான்!
 
டயானா படம் பத்திரி கைகளில் வந்தவுடனேயே, இங்கி லாந்தில் டயானா ஜுரம்வெகு வேகமாகப் பரவத் தொடங் கியது. டயானாவைப் போலவே இருக்கும் பெண் யார்?’ எனும் தலைப்பில் ஒரு பிரபல பத்திரிகை போட்டியே நடத்தியது. அந்த அளவுக்குத் திருமணத்திற்கு முன்னறே படு பாப்புலராகி விட்டார் டயானா. அவர் நிற்பது, சிரிப்பது என எல்லாமே பரபரப்புச் செய்தியானது.

தேவதைக் கதைகளில் வருவதுபோல் டயானா சார்லஸ் திருமணம் உலகமே வியக்கும் படியாக, மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. திருமணத்தை நேரடியாக ஒளிபரப்பியது பி.பி.சி தொலைக்காட்சி. உலகமே அதை ஆவலுடன் ரசித்துப் பார்த்தது.

அரச குடும்பத்தின் மருமகளாகி விட்ட நிலையில் தன் கடமைகளைச் செய்வதில் மிகக் கவனமாக இருந்தார் டயானா. அரச குடும்பத்தினர் பொதுவாக வெளியுலகத்தினருடன் அதிகம் பட்டுக் கொள்ளாமல், ஏதாவது சில முக்கிய விழாக்களுக்கு மட்டும் செல்வதுண்டு... ஆனால் டயானா, தன் இயல்பான இரக்க சுபாவத்தால், நர்சரிகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு அதிகமாகச் செல்லத் தொடங்கினார்.

ஒரு வட்டத்திற்குள் தன்னைச் சுருக்கி கொள்ளாமல், எளிமையாக அவர் எல்லோருடனும் சகஜமாகப் பழக, அவரது இமேஜ் கிடுகிடுவென ஏறத் தொடங்கியது. சார்லஸ் கூட ஒரு முறை ‘‘இப்போதெல்லாம் டயானாவுக்குக் கொடுக்கப்படும் பூங்கொத்துக்களைக் கலெக்ட் செய்வதே எனக்குப் பெரிய வேலையாகிவிட்டது!’’ என்று விளையாட்டாகக் குறிப்பிட்டார். மாமியார் ராணி எலிஸபெத்துக்கு டயானாவின் மேல் தனிப்பாசம். டயானாவும் மாமியாரிடம் பிரியமாகப் பழகுவார். 

பிற்காலத்தில் மனசுக்கு சங்கடமான சில நேரங்களில், மாமியாருடன் சென்று பேசிக் கொண்டு இருந்ததுதான் டயானாவின் மனசுக்கு நிம்மதியளித்திருக்கிறது. அரச குடும்பத்தினரின் வாழ்க்கை முறை அவ்வளவாக சாதாரண மக்களுக்குத் தெரியாது. 

அவர்களுடைய புகைப்படங்கள் கூட எப்போதாவதுதான் பத்திரிகைகளில் வரும். ஆனால் டயானா, வேல்ஸ் இளவரசியானதும் நிலைமை தலைகீழானது. அவர் தினசரி செய்யும் அனைத்து காரியங்களும் வரிசை மாறாமல் பேப்பரில் வர ஆரம்பிக்க, அரண்மனைக்குள் மெல்ல சூடு கிளம்ப ஆரம்பித்தது.

மகாராணியே வேறு வழியில்லாமல் அனைத்து பத்திரிக்கைகளின் எடிட்டர்களையும் அரண்மனைக்கு வரவழைத்து, இனி டயானாவை போகுமிடமெல்லாம் படமெடுத்து தொந்திரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். 

எல்லாம் ஒரு சில நாட்கள்தான்! மறுபடி பழைய கதைதான். திருமணம் ஆன மறு வருடத்திலேயே முதல் மகன் வில்லியம் பிறந்தான். இரண்டு வருடங்கள் கழித்து அடுத்த குழந்தை ஹென்றி. இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பள்ளிக்குச் சென்று படித்ததில்லை. ஆசிரியர்கள்தான் அரண்மனைக்கு வந்து பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால், தன் மகன்கள் விஷயத்தில் இது தொடர டயானா விரும்பவில்லை. 

அவர்கள் பள்ளிக்குச் சென்றுதான் படிக்கவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அப்போதுதான் மக்களோடு மக்களாகப் பழகும் வாய்ப்பு தன் குழந்தைகளுக்குக் கிடைக்கும் என்று டயானா நம்பினார்.

கணவரின் மேல் டயனா, அளவுக்கு அதிகமான காதல் கொண்டிருந்ததாலேயோ என்னவோ... கமீலா என்ற திருமணமான பெண்ணுடன் சார்லஸ§க்கு முன்பிருந்தே ஒரு உறவு இருந்து வருகிறது... அது இப்போதும் தொடர்கிறது என்று தெரிந்த போது, அவரால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. திருமணமான முதல் வருடத்திலேயே இதனால் இருவருக்கும் பிரியம் குறைந்தது. 

மனம் வெறுத்து டயானா சிலமுறை தற்கொலை முயற்சியில்கூட ஈடுபட்டிருக்கிறார். எதை சாப்பிட்டாலும் உடனே வாந்தி எடுத்துவிடுகிற (புலீமியா) நோய் கூட அவருக்கு வந்துவிட்டது. தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளை மறக்க, பல சமூக நலத் திட்டங்களில் இன்னும் அதிகமாக ஈடுபட ஆரம்பித்திருந்தார் டயானா.அப்படித்தான் ஒரு முறை, எய்ட்ஸ் நோயாளி ஒருவருடன் டயானா கைகுலுக்கிய புகைப்படம் பிரிட்டிஷ் நாளிதழ்களில் முதல் பக்கத்தைப் பிடித்தது! எÊய்ட்ஸ் என்பது தொட்டாலே ஒட்டிக் கொள்ளும் வியாதி என்று பலரால் கருதப்பட்ட அந்தக் காலகட்டத்தில், இளவரசியே இப்படி நடந்துகொண்டது, எய்ட்ஸ் குறித்த பல தவறான பயங்கள் நீங்க வழி வகுத்தது.

இந்தோனேஷியாவுக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த தொழுநோயாளிகளிடம் டயானா கைகுலுக்கியதும் பலரையும் வியக்க வைத்தது. குழந்தை ஹாரி, நர்சரி பள்ளியில் சேர்க்கப்பட்ட காலகட்டத்தில் சார்லஸ் _ டயானா விரிசல் பகிரங்கமானது. தன்மேல் தவறில்லை என்பதுபோல் சார்லஸ் பி.பி.சி.யில் பேட்டிகூட அளித்தார். தொடர்ந்து டயனாவையும் பேட்டி கண்டார்கள். ‘‘அரசராகும் எண்ணம் சார்லஸ§க்கு இல்லை..’’ என்று, டயானா தன் பேட்டியில் பல விஷயங்களை பகிரங்கப்படுத்த அது, இங்கிலாந்து மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கூடவே ‘‘நான் ராணியாக விரும்புகிறேன்... ஆனால் சிம்மாசனத்தில் அமரும் ராணி அல்ல... 

மக்கள் மனங்களில் என்றென்றும் ராணியாக இருக்கவே விரும்புகிறேன்..’’ என்று டயானா கூறியது மக்கள் மனதில் பசை போட்டு ஒட்டிக்கொண்டது. காரணம் உதட்டிலிருந்து வராமல் அவரது உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள் இவை என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்திருந்தது. இருவரின் தொலைக்காட்சிப் பேட்டிகளும் ஒலிபரப்பான உடனே மக்கள் யார் பக்கம்?’ என்று வேறொரு தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் ‘‘தொலைக்காட்சி பேட்டிக்குப் பிறகு நாங்கள் டயானாவை மேலும் விரும்புகிறோம்!’’ என்று எண்பத்துமூன்று சதவிகிதத்தினர் பதிலளித்து அசத்தினர்.

மக்கள் ஆதரவு டயானாவுக்குதான் என்பதை அறிந்தவுடன், பக்கிங்காஹாம் அரண்மனையும் டயானாவுக்கு வெளிப்படையான எதிர்ப்பு காட்டாமல் அடக்கி வாசித்தது. கமீலாவுடன் தனக்கிருந்த தொடர்பை பிறகு வெளிப்படையாக ஒத்துக் கொண்டார் சார்லஸ். டயானாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்களும் நடக்காமலில்லை. டயானாவின் குதிரைப் பயிற்சியாளரான ஜேம்ஸ் ஹெரிட் ஒரு நூலை வெளியிட்டார். 

அதில் டயானாவுடன் தான் நெருக்கமாக இருந்தது உண்டு என்று குறிப்பிட்டார். டயானா இதை மறுக்கவில்லை. ஆனால் ‘‘அவர் எனது மிக அரிய நண்பராக விளங்கியவர். அதுவும் சோதனையான ஒரு கட்டத்தில்... அவரது அந்த நூல் வெளியாவதற்கு பத்து நாட்கள் முன்பு என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் அவர். 

என் புத்தகத்தில் நீங்கள் கவலைப்படும்படியாக நான் எதையும் எழுதவில்லைஎன்றார். நானும் முட்டாள்தனமாக அதை நம்பினேன்...’’ என்று உடைந்துபோய்ச் சொன்னார் டயானா. சார்லஸ்_டயானா விரிசல் இவ்வளவு பகிரங்கமான பிறகு விவகாரத்துதான் ஒரே வழி என்று மகாராணியே வற்புறுத்த, விவாகரத்து நடந்தது. டயானா இந்தியாவுக்குகூட வந்திருக்கிறார். உடல்நலம் குறைந்திருந்த அன்னை தெரசாவை சந்தித்தார் டயானா.

தன் 79 விலையுயர்ந்த உடைகளை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைத்த பெருந்தொகையை தர்மகாரியங்களுக்கு செலவிட்டார். அரபு நாட்டைச் சேர்ந்த கோடிஸ்வரரான முகமது ஹல் என்பவரின் மகன் டோடி_யுடன் டயனாவுக்கு ஏற்பட்ட பர்சனல் நெருக்கம் புதிய சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது. இருவரும் பாய்மரக்கப்பலில் உற்சாகம் பொங்க பயணம் சென்றது பத்திரிக்கைகளுக்குப் பெரும் தீனியைக் கொடுத்தது. 

இருவரும் செல்லுமிடமெல்லாம் கேமராவும் கையுமாய் பத்திரிகைக்காரர்கள் அவர்களைத் துரத்தினார்கள். டோடியும் டயானாவும் பிரான்ஸில் தனிமையில் இருக்க ஆசைப்பட, பத்திரிகைகாரர்களால் அதுமுடியாமல் போனது. பாரீஸின் ரிட்ஸ் உணவகத்தில் மாலை உணவுக்குப் பின் காரில் டயானா, டோடி, ஒரு பாதுகாப்பாளர் மற்றும் ஓட்டுனர் போய்க் கொண்டிருந்தார்கள். விடாமல் அவர்கள் காரைத் துரத்தியது வேறு ஒரு வாகனம்.

அதில் பத்திரிக்கைப் புகைப்படக்காரர்கள். அவர்களிடமிருந்து தப்பியே ஆகவேண்டும் என்ற வேகத்தில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில், பறந்தது டயானாவின் கார். விளைவு? கோரவிபத்து! டோடியும், கார் ஓட்டுனரும் அந்த இடத்திலேயே மரணமடைய, உயிருடன் இருந்த டயானாவை மட்டும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
 
அழகான தேவதை போன்றே பார்த்துப் பழகிய டயானாவை, முகமும் எலும்புகளும் சிதைந்த நிலையில் பார்த்த மருத்துவர்கள் கூட அடக்க முடியாமல் கதறி அழுதனர். இரண்டு நர்சுகள் வாயிலெடுத்து விட்டனர். 

எவ்வளவு முயன்றும் அந்த புன்னகை இளவரசியை காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்த செய்தி கேள்விப்பட்ட உலகமே வேதனையில் உருகி கண்ணீர் விட்டது.

பல்லாயிரக்கணக்கான மலர்கள் அந்த இனிமையான இளவரசியின் கல்லறைக்கு இன்னமும் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. அவர் மீது மக்கள் வைத்திருக்கும் அன்புக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறது!
 
நன்றி: சங்கர் ஜீவா (http://sureshnamashivayam.blogspot.com)

கின்னஸ் புத்தகம் உருவான விதம்.

உலகிலேயே மிகவும் பெரியது. மிகவும் சிறியது ஆகிய விவரங்கள் இதில் அடங்கியிருந்தன. மேலும் அவ்வாண்டு வெளியான புத்தகங்களில் அமோக விற்பனையான புத்தகம் என்ற பெருமையும் கின்னஸ் புத்தகத்திற்குக் கிடைத்தது.
அன்று தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது சாதனை புரிந்தவர்களைப் பற்றிய செய்திகளோடு புத்தகம் வெளிவந்தது. தொடர்ந்து ஆண்டுதோறும் வெளிவரும் கின்னஸ் புத்தகம் இடையில் 1957, 1959 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் வெளிவரவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை. தனிப்பட்ட நபரின் எந்த ஒரு புதிய சாதனையையும் கின்னஸ் புத்தகத்திற்கு அனுப்பலாம். இதற்கான தகுந்த
கின்னஸ் புத்தகம்” எப்படி உருவானது தெரியுமா உங்களுக்கு?
1951ம் வருடம் ஒரு நாள் மாலைப்பொழுது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘கின்னஸ் வாட் சாலைஎன்ற அமைப்பிற்கு நிர்வாக இயக்குநராக இருந்தவர் ‘சர்க்யூ பீவர்’. இவர் வேட்டையாடுவதற்காக ஒரு நதிக் கரையோரம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆகாயத்தில் ஒரு நீண்ட கோடு போல ஏராளமான பறவைகள் பறந்து சென்று கொண்டிருந்தன. அவர், உடனே அவற்றை சுட எண்ணி, குனிந்து தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்தார்.

எடுத்து நிமிர்ந்தவர் அந்தப் பறவைக்கூட்டம் கண்ணுக்கே தெரியாத தொலைவுக்குச் சென்று விட்டதை அறிந்தார். வியப்பில் உறைந்து போனார். என்ன ஒரு வேகம்! ‘கோல்டன் பிளவர்’ என்ற பறவையினம் அவை.
அப்போதுதான் அவருக்கு ஒரு சிந்தனை பளிச்சிட்டது. ஒருவேளை உலகிலேயே மிகவும் வேகமாகப் பறக்கும் பறவையினம் இவையாகத்தான் இருக்குமோ என்று எண்ணினார். பலரிடம் பல புத்தகங்களிலும் விடை தேடினார். பலன்தான் இல்லை.

இது குறித்து நாமே ஒரு புத்தகம் வெளியிட்டால் என்ன என்று யோசித்தார். அவர் உடனே லண்டன் சென்றார். அங்கு அரசாங்கத்திற்காக புள்ளி விவரங்கள் சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டர், ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டைச் சகோதரர்களைச் சந்தித்தார்.
 
தனது புதிய புத்தக யோசனையை தெரிவித்தார். அவர்களும் ஒத்துழைப்புதர முன்வந்தனர். மூவரின் உழைப்பில் பிறந்ததுதான் கின்னஸ் புத்தகம். முதல் கின்னஸ் புத்தகம் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் 198 பக்கங்களுடன் அவர்களால் 
வெளியிடப்பட்டது.

ஆதாரங்களைக் காட்டவேண்டும் எப்படி? என பார்ப்போம்.
சாதனையாளரின் சாதனை பற்றிய பத்திரிகை செய்திகள், பார்வையாளர்களாக இருந்த பொறுப்பானவர்களின் கையெழுத்துத் தொகுப்பு, இவை உண்மைதான் என்று ஒரு பொறுப்பான நிறுவனத்தின் தலைவர் வழங்கும் உறுதிமொழி.
இவ்வளவும் அனுப்ப வேண்டும். புதிய சாதனை முந்தைய சாதனையை முறியடிப்பதற்காக இருந்தால் அந்தச் செய்தியும் சாதனையாளர் பற்றிய தகவலும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும்.

கின்னஸ் புத்தகத்தில் சாதனை நிகழ்ச்சிகளை வெளியிடுவார்களே தவிர, யாரையும் சாதனைபுரியத் தூண்டமாட்டார்கள். கின்னஸ் புத்தகம் பற்றிக் கூட கின்னஸ் புத்தகத்தில் 1974ல் இடம் பெற்றது.
அது உலகிலேயே அதிகமாக விற்பனையான புத்தகம் என்ற வரிசையில்தான். முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த புத்தகம் விரைவிலேயே 35 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
Source: nilamuttram.com

என் சவ அடக்கத்தின்போது என்ன பேசப்பட வேண்டும்? - மார்ட்டின் லூதர் கிங்

தன் சவ அடக்கத்தின்போது என்ன பேச வேண்டும் என்பதை மார்ட்டின் லூதர் கிங் இவ்வாறு கூறியுள்ளார்.

“என் சவ அடக்கத்தின்போது என்ன பேசப்பட வேண்டும்? இன்று காலை அதைப்பற்றிச் சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறேன். என் சவ அடக்கத்தின்போது நீண்டபொழுதைச் செலவிட வேண்டாம். சீக்கிரமே அது நடந்து முடியட்டும். என் சவ அடக்கத்தின் இறுதிக்கட்டமாக அனுதாப வார்த்தைகளைப் பேசுவதற்காக சிலரை நீங்கள் அழைத்து வரும்போது நீண்ட நேரம் பேசவேண்டாம், சுருக்கமாக உங்கள் உரை இருக்கட்டுமென்று அவர்களிடம் சொல்லுங்கள்.

உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்காக எனக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி எதுவும் குறிப்பிட வேண்டாம், அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.

பல்வேறு சேவைகளுக்காக முந்நூறு, நானூறு பரிசுகளைப் பெற்றவன் நானென்பதைக் குறிப்பிட வேண்டாம். அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.

அந்த நாளில் அவர்கள் மார்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றவர்களுக்குத் தொண்டு புரிவதற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தானென்று குறிப்பிட வேண்டும். மார்டின் லூதர் கிங் ஜூனியர் எல்லாரையும் நேசிக்க முயன்றான் என்று சிலர் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.

அந்த நாளில் பசித்தவர்களுக்கு உணவளிக்க நான் பாடுபட்டேனென்று நீங்கள் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். நிர்வாணமாக நின்றவர்களுக்கு எல்லாம் உடையளிக்க உயிர் உள்ளவரை உழைத்தவன் நானென்று அந்தாளில் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். சிறையில் வாடியவர்களை எல்லாம் உயிர் உள்ளவரை நான் தேடிச்சென்று பார்த்து ஆறுதல் கூறியவன் என்று நீங்கள் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.

மனித குலத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவன் நானென்று அந்த நாளில் என்னைப் பற்றி நீங்கள் குறிப்பிட வேண்டும். நீதிக்காகத் தமுக்கடித்தவன் நானென்று தாராளமாகச் சொல்லுங்கள். உலக அமைதிக்காக தமுக்கடித்தவன் நானென்று சொல்லுங்கள்.”
Via Link

ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்

பெர்முடா முக்கோணம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இன்றைய நவீன அறிவியலால்கூட இன்னதென்று கூறமுடியாத மர்மங்களும், வியப்புகளும் அதிர்ச்சியும் நிறைந்த இடம்தான் பெர்முடா முக்கோணம். இது "சாத்தானின் முக்கோணம்' என்றும் அழைக்கப்படுகிறது. புளோரிடா நீரிணைப்பு, பகாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அட்லாண்டிக்கின் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை ஒரு முக்கோணமாக அமைந்துள்ளது இது. சில ஆய்வாளர்கள் இந்த முக்கோணப் பகுதியில் மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கிறார்கள்.

"பிளைட்-19' என்பது குண்டு வீசும் விமானங்களுக்குப் பயிற்சியளிக்கும் விமானமாகும். இது, அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமானது. இந்த விமானம் 1945-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, ஒரு பயிற்சியில் பங்குகொண்டது. அதன் பிறகு, அட்லாண்டிக் கடலின்மீது பறந்துகொண்டிருந்தது. அது மர்மமான முறையில் திடீரென்று பெர்முடா பகுதியில் மறைந்துபோனது. இந்த நிகழ்வைப் பற்றி கடற்படை அதிகாரிகள் ஒரு அறிக்கை அளித்தார்கள். அந்த அறிக்கையில் உள்ள விவரம் இதுதான்:

""விமானம் தன் கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போவதற்குச் சற்று முன்பு, விமானத்தின் திசை காட்டி இயற்கைக்கு மீறிய அளவுகளைக் காட்டியது. அனுபவம் வாய்ந்த விமானி லெப்டினென்ட் சார்லஸ் கரோல் டெய்லரின் மேற்பார்வையில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிகழ்வு ஒரு புரியாத புதிராக உள்ளது.''

இதைவிட மர்மமான இன்னொரு நிகழ்ச்சி உண்டு. ஒரு கப்பல் காணாமல் போய்விட்டது. அந்தக் கப்பலை மீட்பதற்காக கடற்படை விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த மீட்பு விமானத்தில் மொத்தம் 13 பேர் பயணம் செய்தார்கள். வட அட்லாண்டிக் கடலில் பறந்துகொண்டிருந்தது இந்த விமானம். சில மணிநேரத்திற்குப் பிறகு இந்த விமானத்திலிருந்து எந்தத் தகவலும் இல்லை. அப்படியே தொலைந்துபோய்விட்டது! இந்த சம்பவமும் பெர்முடா பகுதியில் நடந்தது.

1872-ஆம் ஆண்டு 282 டன் எடைகொண்ட "மேரி செலஸ்டி' என்னும் கப்பலும், 1864-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி "மேரி செலஸ்டி' என்று அதே பெயர்கொண்ட இன்னொரு துடுப்புக் கப்பலும் பெர்முடா முக்கோணப் பகுதியில் மறைந்துபோனதாக பழைய கால செய்தித் தாள்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மேலும், இந்த பெர்முடா முக்கோணப் பகுதியில் 1918-ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் தேதிக்குப் பிறகு ஒரு சம்பவம் நடந்தது. பார்படோஸ் தீவிலிருந்து கிளம்பியது "யுஎஸ்எஸ் சைக்ளோப்ஸ்' எனும் ஒரு பயணிக்கப்பல். அது எந்தச் சுவடும் இல்லாமல் தனது 309 ஊழியர்களுடன் தொலைந்து போனது.

"ஆரான் பர்' என்பவர் முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி. இவரது மகள் "தியோடோசியா பர் அல்ஸ்பான்', தெற்கு கரோலினாவிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு "பேட்ரியாட்' எனும் கப்பலில் பயணம் செய்தார். பின்பு, அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. பெர்முடா முக்கோணத்தில் 1812-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி நடந்த சம்பவம் இது.

முக்கோண எல்லைக்கு உட்பட்ட பகுதிதான் போர்டோரிகோ. இங்குள்ள சான்ஜூ நகரின் வான் பகுதியிலிருந்து ஒரு விமானம் பறந்தது. இந்த விமானத்தின் பெயர் "டக்லஸ் பிசி-3.' மியாமி நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்த விமானம் திடீரென்று மறைந்துபோனது. அதில் 32 பேர் பயணம் செய்தார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இது நடந்தது 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி.

அசோர்ஸிலிருந்து பெர்முடா செல்லும் பயணிகள் விமானம் 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி காணாமல் போனது. 1949 ஜனவரி 17-இல் ஜமைக்காவிலிருந்து, கிங்ஸ்டனுக்குப் பறந்து சென்ற இன்னொரு விமானத்தைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை. இந்த இரண்டு விமானங்களும் தென் அமெரிக்க பிரிட்டிஷ் ஏர்வேஸýக்குச் சொந்தமான ஒரே ரக விமானங்கள். இதுவும் பெர்முடா முக்கோணத்தில் நடந்தது.

இன்னும் ஒரு பெர்முடா தகவல். முன்பு கந்தகம் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது "எஸ் எஸ் மரைன் சல்பர் குயின்' எனும் கப்பல். இது, பிறகு 1963 பிப்ரவரி 4-ஆம் தேதி எண்ணெய் ஏற்றிக்கொண்டு புளோரிடா வழியாக சென்றுகொண்டிருந்தது. அதில் 39 பயணிகள் இருந்தார்கள். அந்தக் கப்பலிலிருந்து பிறகு எந்தத் தொடர்பும் இல்லை. இந்தக் கப்பல் "காண முடியாத இடத்திற்குச் சென்றுவிட்டது' என்ற தகவலை மட்டும் பத்திரிகைகளில் காணமுடிந்தது.

மேலும், ஒரு வியப்பான சம்பவம் பெர்முடா முக்கோணப் பகுதியில் நடந்தது. இது நடந்தது 1921-இல். "ரய் ஃபுகு மரு' எனும் ஜப்பானியக் கப்பல் எந்தத் தடயமும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக மூழ்கிவிட்டது. அப்போது கப்பலிலிருந்து,""கத்திக் கூம்புபோல அபாயம் தெரிகிறது...! விரைந்து உதவிக்கு வாருங்கள்...''எனும் வார்த்தைகள் அபாய அறிவிப்பாக அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. கத்திக் கூம்பு எனும் வார்த்தை எதைக் குறிக்கிறது என்று இன்றுவரை அறியப்படவில்லை.

மேற்கண்ட அனைத்து மர்மச் சம்பவங்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் நடந்திருந்தாலும், ஏன் இப்படி நடக்கின்றன? என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை.

1962-இல் "பிளைட்-19' தொலைந்துபோன நிகழ்ச்சி குறித்து அமெரிக்காவின் புகழ்பெற்ற இதழ் ஒன்று ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. விமான ஓட்டி,""நாங்கள் இப்போது எங்கே இருக்கிறோம் என்பதே எங்களுக்குத் தெரியவில்லை...'' என்று தகவல் அனுப்பியதாக , அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது. மேலும், வின்சென்ட் காடிஸ் என்பவர் "அர்கோசி' எனும் இதழில் எழுதும்போது, இந்த விமானம் தொலைந்ததற்கு மாயச் சக்திகளே காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், கடற்படை விசாரணைக் குழு அதிகாரிகள்,""விமானம் செவ்வாய் கிரகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது'' எனும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர். இந்தச் சமயத்தில் பெர்முடா முக்கோணம் குறித்த திடுக்கிட வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள் உலக நாடுகளெங்கும் பத்திரிகைகளில் பிரசுரமாயின.

இந்த மர்ம நிகழ்ச்சிகளுக்கு மேலும் திகிலூட்டும் விதமாக,"நமது கொல்லைப் புறத்தில் கடல் மர்மம்' எனும் கட்டுரையும், "கண்ணுக்குத் தெரியாத வெளிகள்' மற்றும் "சாத்தானின் முக்கோணத்தில்' எனும் புத்தகங்களும் வெளிவந்தன. இந்த வெளியீடுகளில், "வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த மாய சக்திகள் கப்பல்களையும், விமானங்களையும் பிடித்துச் சென்றிருக்கலாம். அதில் இருந்த மனிதர்களை அந்த மாய சக்திகள் என்ன செய்தன என்று கடவுளுக்குத்தான் தெரியும்' என்று எழுதப்பட்டிருந்தன.

கரீபியன் தீவு மக்களும்,முக்கோணப் பகுதியில் நிகழும் மர்ம சம்பவங்கள் அனைத்திற்கும் மனிதனுக்கு அப்பாற்பட்ட மாயச் சக்திகளே காரணம் என்று முழுமையாக நம்பினார்கள்.

இந்த மர்மங்களுக்கு மாயச் சக்திகள்தான் காரணம் என்பதைப் பொய்யாக்கும் வகையில், அரிசோனா பல்கலைக்கழக ஆய்வு நூலகர் டேவிட் குசெ என்பவர், "தி பெர்முடா டிரையாங்கிள் மிஸ்ட்ரி சால்வ்டு' என்ற நூலை வெளியிட்டார். அவர், அந்த நூலில் பெர்முடா பகுதியில் நடைபெறும் தொலைதல்களுக்கு மனிதத் தவறுகள்தான் காரணம் என்று எழுதினார். மேலும், சூறாவளித்தாக்குதல், கடலுக்கு அடியில் ஓடும் வளைகுடா நீரோடைகள், மிகப் பெரிய முரட்டு அலைகள், கடற்கொள்ளையர்களின் செயல்கள் ஆகியவையும் காரணங்கள் என்று உறுதியாகக் கூறினார். அதற்கான தகவல்களையும் அவர் வெளியிட்டிருந்தார். சில எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும், இது மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்திகளின் வேலை என்று கதைவிடுவதற்கு வியாபார நோக்கமே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.

சில ஆய்வாளர்கள், ""பெர்முடா முக்கோணப் பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் மீத்தேன் ஹைட்ரேட் படிமங்களாகச் சேகரமாகியிருக்கின்றன. இந்த மீத்தேன் ஹைட்ரேட் நீர் அடர்த்தியைக் குறைத்து பெரிய நீர்க் குமிழ்களை உருவாக்கி கப்பல்களை மூழ்கடித்துவிடுகின்றன'' என்று தெரிவிக்கின்றனர். மேலும் சில ஆய்வாளர்கள்,""திடீர் மீத்தேன் வெடிப்புகள் சேற்று எரிமலைகளை உருவாக்கி கப்பல்களை மிதக்க முடியாமல் மூழ்கடித்துவிடுகின்றன'' என்ற தகவல்களை வெளியிட்டனர்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க நிலவியல் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில்,""உலகம் முழுதும் கடலுக்கடியிலான ஹைட்ரேட்டுகள் பெருமளவில் இருக்கின்றன. குறிப்பாக, தென்கிழக்கு அமெரிக்கக் கடற்கரையை ஒட்டிய "ப்ளேக்ரிட்ஜ்' பகுதியில் இச்சேகரங்கள் மிக அதிகமாக இருக்கின்றன. இருப்பினும், அக் கடற்பகுதியில் பெர்முடா முக்கோணப் பகுதியில் நடப்பதைப்போன்ற எந்த நிகழ்வுகளும்

நடப்பதில்லை. பெர்முடா முக்கோணப் பகுதியில் மீத்தேன் ஹைட்ரேட் படிமம் மிகக் குறைவு. எனவே, மர்மச் சம்பவங்களுக்கு ஹைட்ரேட்டுகள்தான் காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது'' என்று தெரிவித்திருந்தது.

இதுவரை ஏராளமான விமானங்களும், கப்பல்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் மிகவும் மர்மமான முறையில் மறைந்திருக்கின்றன. ஆயினும், இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் என்னவென்று உறுதியாகக் கூறமுடியாத நிலையே உள்ளது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Premium Blogger Templates | Best View (1024x768) on Mozilla Firefox and IE 7.0